பாகிஸ்தானில் தாலிபான்களின் தலைவர் அஸ்மத்துல்லா ஷாஹீன் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள தாலிபான் அமைப்பின் தலைவர் அஸ்மத்துல்லா ஷாஹீன் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தானில் செயல்படும் தாலிபான் அமைப்பின் தலைவர் ஹகிமுல்லா மெஹ்சூத் அமெரிக்காவின் ஆளில்லா போர் விமான தாக்கதலில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி பலியானார். இதையடுத்து அந்த அமைப்பின் இடைக்கால தலைவராக அஸ்மத்துல்லா ஷாஹீன் நியமிக்கப்பட்டார். அஸ்மத்துல்லா வடக்கு வஜிரிஸ்தானின் தலைநகரான மிரான்ஷாவில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள தர்கா மண்டி என்ற கிராமத்தில் இன்று காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேறு ஒரு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அஸ்மத்துல்லா, அவரது கார் டிரைவர் மற்றும் பாதுகாவலர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். அஸ்மத்துல்லா இறந்துவிட்டதை அவரது குடும்பத்தார் உறுதி செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள தாலிபான்கள் பிரதமர் நவாஸ் ஷரீஃபின் ஆட்சியை கவிழ்க்க போராடி வருகின்றனர். அப்படி ஆட்சியை கவிழ்த்துவிட்டு நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தால் தேடப்படும் 20 பேரில் அஸ்மத்துலாவும் ஒருவர். அவரை பிடித்து தருவோருக்கு ரூ. 74 லட்சத்து 46 ஆயிரத்து 60 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 2009ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications