குடும்ப கட்டுப்பாட்டில் தளர்வு: சீனாவில் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்.. அதிகாரப்பூர்வ அனுமதி
பெய்ஜிங்: சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகள் வரும் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக மோசமாக பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் வெளியான ஐபிசிசி அறிக்கையும் கூட இதே தகவலை வெளியிட்டு இருந்தது. எரிபொருள் பயன்பாடு தொடங்கி காட்டுத்தீ வரை பல்வேறு விஷயங்கள் காலநிலை மாற்றத்திற்கு காரணங்களாக சொல்லப்படுகிறது. அதில் மக்கள் தொகை பெருக்கமும் ஒரு காரணம்.
கூடுதல் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டால், கூடுதல் எரிபொருள் பயன்பாடு, ஆற்றல் பயன்பாடு, கூடுதல் உற்பத்தி என்று பல்வேறு விஷயங்கள் ஏற்பட்டு அது மேலும் காலநிலை மாற்றத்தை ஊக்குவிக்கும். இதனால் பல்வேறு உலக நாடுகள் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

சீனா
இப்படிப்பட்ட நிலையில்தான் சீனாவில் மக்கள் தொகையை மீண்டும் பெருக்க அந்த நாடு முடிவு செய்துள்ளது. ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்துள்ளீர்கள். சீனாவின் மக்கள் தொகை சரிவு ஏற்பட்டுள்ளதால் கூடுதல் குழந்தைகளை பெற்றுகொள்ள அந்த நாடு அனுமதி அளித்துள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 140 கோடி பேர் சீனாவில் உள்ளனர். இதன் காரணமாக மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது.

இதற்கு முன் இருந்த விதி
இந்த மக்கள் தொகை ஒரு வகையில் பொருளாதார ரீதியாக வளர அந்த நாட்டிற்கு உதவியது. அந்த நாட்டிற்கு மிகப்பெரிய மனித வளத்தை இந்த மக்கள் தொகை கொடுத்தது. ஆனாலும் அதிக மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் 1979-2016 வரை சீனாவில் ஒற்றை குழந்தை கட்டுப்பாடு இருந்தது. ஒரு குழந்தைக்கும் மேல் அதிகமாக பெற்றுக்கொண்டால் அபராதம், கட்டாய கருக்கலைப்பு, வேலைவாய்ப்பு வழங்கப்படாது உள்ளிட்ட கடுமையான விதிகள் இருந்தன. சர்வதேச அளவில் இது விமர்சனங்களை சந்தித்தது. இதனால் இந்த விதியில் கொஞ்சம் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.

தளர்வு
அதன்படி ஒவ்வொரு தம்பதியும் 2 குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் பெற்றுக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும். 2016ல் இந்த விதி தளர்த்தப்பட்டு 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டது. அதேபோல் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அவர்கள் அரசு திட்டங்கள் மூலம் பலன் பெற முடியாது என்று திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது அந்த நாட்டை பாதிக்க தொடங்கியது. மக்கள் தொகை கட்டுப்பாடு அந்த நாட்டின் மனித வள பலத்தை குறைத்தது. அந்த நாட்டிற்கே இது எதிராக திரும்ப தொடங்கியது.

மாற்றம்
ஆம் அங்கு வயதானவர்கள் அதிகமானார்கள். ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஜப்பான் போல சீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் குறைந்து கஷ்டப்படும் நிலைக்கு சென்றது. குழந்தைகள் பிறப்பு அதிகரித்தால்தானே அவர்கள் வளர்ந்து இளைஞர்கள் ஆக முடியும். புதிதாக குழந்தையே பிறக்கவில்லை என்றால் முழுக்க முழுக்க வயதான நபர்கள் தானே இருப்பார்கள்.. அப்படி ஒரு நிலைக்குத்தான் சீனா நகர தொடங்கியது. 2020ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் இந்த சரிவு கண்டுபிடிக்கப்பட்டது.

12 மில்லியன்
கடந்த வருடம் 12 மில்லியன் குழந்தைகள் சீனாவில் பிறந்துள்ளன. இது 2016ல் பிறந்த 18 மில்லியன் குழந்தைகளை விட குறைவு. 1960க்கு பின் குழந்தைகள் பிறப்பில் இதுதான் பெரிய சரிவு. இதனால்தான் மனித வளத்தை பெருக்கும் வகையில் சீனாவில் குழந்தைகள் பிறப்பு கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது. சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள்
கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி மிகப்பெரிய சரிவை சந்தித்தால் இரட்டை குழந்தை திட்டத்தை தற்போது சீனா கைவிட்டுள்ளது. சீன மக்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக குழந்தைகள் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல உதவிகளை கொண்டாட வர அந்த நாடு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு முன்பே வந்துவிட்டாலும் இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனாலும் சீன மக்கள் கடந்த சில வருடங்களாக குழந்தைகள் பெற்றுக்கொள்வதில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் இனியும் இவர்கள் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்வார்களா, மக்கள் தொகை அங்கு பெருகுமா என்பது சந்தேகம்தான்.












Click it and Unblock the Notifications