அமெரிக்காவுடன் நேரடியாக மோதும் பிரிக்ஸ்? சீனா தடாலடி கருத்து.. அப்போ டாலரின் எதிர்காலம் தான் என்ன?
பெய்ஜிங்: அமெரிக்க அதிபரான டிரம்ப் உலக நாடுகள் மீது வரி விதிக்கப் போகிறேன் என்றே திரும்பத் திரும்ப சொல்லி மிரட்டி வருகிறார். இது சர்வதேச அளவில் ஒருவித வணிகப் பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதற்கிடையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைச் சீனா ஓப்பனாகவே எதிர்த்துள்ளது. வரிகளை ஆயுதம் போலப் பயன்படுத்துவது தவறான போக்கு என்று விமர்சித்துள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை விதிக்கப்போவதாக அறிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதமே உலக நாடுகளுக்கு டிரம்ப் வரிகளை அறிவித்திருந்தார். இருப்பினும், சில காரணங்களால் அதை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாகவும் கூறியிருந்தார். அந்த 90 நாள் காலக்கெடு நாளை மறுநாள் அதாவது ஜூலை 9ம் தேதியுடன் நிறைவடைகிறது.

டிரம்ப் வரி
டிரம்ப் மீண்டும் வரிகளை அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அவர் சீனாவுக்கு எதிராகக் கடுமையான வரிகளை அறிவிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ள நிலையில், சீனா மீது டிரம்ப் அதிகபட்ச வரிகளை விதிப்பார் என்றே சொல்லப்படுகிறது.
இதற்கிடையே அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைச் சீனா கடுமையாக எதிர்த்துள்ளது. அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை வைத்திருப்பதால் பிரிக்ஸ் நாடுகளுக்குக் கூடுதலாக 10% வரிகளை அறிவிக்கப்போவதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், சீன வெளியுறவு அமைச்சகம் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது.
வரி ஆயுதம் இல்லை
இது தொடர்பாகச் சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், "இறக்குமதி வரிகளை அதிகரிப்பதால் யாருக்கும் பயனில்லை. மேலும் பிரிக்ஸ் அமைப்பு திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஒத்துழைப்பையே ஊக்குவிக்கிறது. பிரிக்ஸ் என்பது வளர்ந்து வரும் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் ஒரு தளம். எந்த ஒரு நாட்டிற்கும் எதிராக பிரிக்ஸ் நாடுகள் செயல்படாது" என்றார். மேலும், வரியை ஒரு ஆயுதம் போலப் பயன்படுத்துவது சரியான போக்கு இல்லை என்றும் சாடியுள்ளது.
பிரிக்ஸ் என்றால் என்ன
பிரிக்ஸ் குழுவில் முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இருந்தன. இந்த நாடுகள் 2009ல் முதலில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நடத்தின. கடந்த ஆண்டு எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான் மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளும் உறுப்பினர்களாக இணைந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வர்த்தகத்தில் எப்போதும் டாலர் தான் பயன்படுத்தப்படும். இந்த முறை பிரிக்ஸ் நாடுகள் டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியை வர்த்தகத்திற்குப் பயன்படுத்த முயன்று வருகிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் சில ஆண்டுகளில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் புதிய கரன்சி மூலம் வர்த்தகம் செய்யும் எனத் தெரிகிறது. இதைத் தான் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகள் என்று டிரம்ப் சாடியுள்ளார்.
டிரம்ப் மிரட்டல்
இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "'பிரிக்ஸ் அமைப்பின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் எந்த நாடுகள் தங்களை இணைத்துக் கொண்டாலும் அவர்கள் கூடுதலாக 10% வரி செலுத்த வேண்டும். இதில் எந்த விதிவிலக்கும் இருக்காது" என்று பதிவிட்டிருந்தார். மேலும், ஒவ்வொரு நாடுகளுக்கும் புதிய வரி விகிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் கடிதங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications