சர்ச்சைக்குரிய பகுதிக்கு போர் விமானங்களை சீனா அனுப்பியதால் பதற்றம்
பெய்ஜிங்: சர்ச்சைக்குரிய கிழக்கு சீனக் கடல் பிரதேசத்துக்கு போர் விமானங்களை சீனா அனுப்பியிருப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு சீனக்கடல் பகுதியில் சில தீவுகள் தொடர்பாக சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்குரிய பகுதியில் சீனா விமானப்படை தளம் ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அப் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறக்க வேண்டுமென்றால் முன்கூட்டியே தகவல் தர வேண்டும் என்று சீனா உத்தரவு பிறப்பித்தது.
சீனாவின் இந்த செயலுக்கு ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. அத்துடன் பிரச்சினைக்குரிய பகுதியின் மீது அமெரிக்காவின் பி-52 ரக போர் விமானங்கள் இரண்டு பறந்து சென்றன.
ஆனால் இது குறித்து சீனாவுக்கு முன்கூட்டி எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிற வகையில் ஜப்பானும் தனது நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனங்களான ஜப்பான் ஏர்லைன்ஸ், ஏஎன்ஏ ஹோல்டிங் ஆகியவற்றின் விமானங்கள் பிரச்சினைக்குரிய பகுதியில் பறக்கிறபோது, அது குறித்த தகவல்களை சீனாவுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை என கூறி உள்ளது.
ஜப்பானும் சீனாவின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து விட்டது. இதனால் தீவுகள் உள்ள கடல் பகுதியை வான் பாதுகாப்பு மண்டலம் என சீனா தன்னிச்சையாக அறிவித்தது. அமெரிக்கா மற்றும் ஜப்பானும் ஏற்க மறுத்ததை அடுத்து சீனா போர் விமானங்களை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
முன்னதாக விமானம் தாங்கி போர்க்கப்பலை பிரச்சினைக்குரிய கடல் பகுதிக்கு சீனா அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications