நீடிக்கும் மௌனம்.. திடீரென பாயும் ஆக்சன்! சீன அமைச்சரவையின் அதிரடி மாற்றங்களுக்கு காரணம் இதுதானா!
பெங்ஜிங்: சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கடந்த இரண்டு மாதங்களாக பொது வெளியில் தலை காட்டாமல் இருந்த நிலையில், தற்போது அவரை பதவியிலிருந்து நீக்கியுள்ளது அந்நாட்டு அரசு.
சீனாவின் அமைச்சரவையில் கடந்த சில நாட்களாகவே மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக அமைச்சர்கள் திடீரென காணாமல் போவதும், பின்னர் அவர்களுக்கு பதில் வேறு அமைச்சர்கள் நியமிக்கப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது. அதாவது சில நாட்களுக்கு முன்னர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் கேங் திடீரென காணாமல் போனார். இரண்டு மாதங்களாக இவர் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை. அதன் பின்னர் திடீரென ஒருநாள், வெளியுறவுத்துறையின் புதிய அமைச்சராக வான் யி நியமிக்கப்பட்டார். ஆனால் கின், ஏன் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இருப்பினும் சில விஷயங்கள் அரசல்புரசலாக வெளியே கசிந்தன. அதாவது, கின் கேங்-க்கும், பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது என்றும், இதனால்தான் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார் என்றும் சொல்லப்படுகிறது. சீனாவை பொறுத்த அளவில் மக்கள் பிரநிதிகளாக இருப்பவர்கள், அதாவது அரசு பதவிகளில் இருப்பவர்கள் திருமணத்தை மீறிய உறவுகளில் இருக்கக்கூடாது என்கிற கட்டுப்பாடு இருக்கிறது. இதை மீறியதால்தான் கின் கேங் நீக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டது.
இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த லி ஷாங்ஃபூவும் திடீரென பொதுவெளியில் ஆளை காணவில்லை. கடைசியாக சீனா-ஆப்பிரிக்கா அமைதி மற்றும் பாதுகாப்பு மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரை பார்த்ததாக சிலர் கூறுகின்றனர். அதன் பின்னர் அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை. இவர் ஏன் காணாமல் போனார்? கின் கேங் போல பெண்கள் விஷயத்தில் கட்டுப்பாடுகளை மீறிவிட்டாரா? அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிவிட்டாரா? என சகட்டு மேனிக்கு மேற்கத்திய பத்திரிகைகள் எழுத தொடங்கிவிட்டன.
ஏற்கெனவே சீனாவுக்கும், மேற்கு நாடுகளுக்கும் ஏழரை பொருத்தம். இப்படி இருக்கையில் அமைச்சர்கள் இரண்டாவது முறையாக காணாமல் போனாது சீனா பற்றி எழுத அவர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு. ஒரு கட்டத்தில், அதிபர் ஜி ஜின்பிங்தான் தனக்கு நெருக்கமில்லாத, ஆதரவளிக்காத அமைச்சர்களை ஓரம் கட்டுகிறார். அதனால்தான் இப்படி நடக்கிறது என்று கூட பத்திரிகைகள் எழுதின. எனவே இது இப்படியே போனால் சரியாக இருக்காது என்று உணர்ந்த சீனா, வி ஷாங்ஃபூவை பதவியிலிருந்து நீக்கியது. வழக்கமாக ஒரு அமைச்சர் அந்த பதவியிலிருந்து நீக்கப்படுகிறார் எனில் இது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் அதிபரிடம் ஒப்புதல் பெற வேண்டும். லி ஷாங்ஃபூ விஷயத்தில் இவையனைத்தும் முறைப்படி செய்யப்பட்டிருக்கிறது.
என்னதான் இதெல்லாம் முறைப்படி நடந்தாலும், இவரை ஏன் பதவி நீக்கம் செய்தோம் என்பதை சீனா வெளிப்படையாக கூறவில்லை. இவர் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது ரஷ்யாவிடமிருந்து சில ஆயுதங்கள் வாங்கப்பட்டன. இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால், தகவல் கசிந்துவிட்டது. அதேபோல தைவானுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்ட விஷயமும் கசிந்துவிட்டன. இது அமெரிக்காவை எரிச்சலடைய செய்திருக்கிறது. எனவே லி ஷாங்ஃபூ தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என உத்தரவிட்டது அமெரிக்கா.
பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக்காக அடுத்த மாதம் அமெரிக்க பாதுகாப்புத்துறை பிரதிநிதிகள் சீனாவுக்கு வரவுள்ள நிலையில் அவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சர் கண்டிப்பாக தேவை. ஆனால் அமெரிக்கா தான் இவரை ப்ளாக் லிஸ்ட்டில் வைத்திருக்கிறதே. எனவேதான் சீனா அவரை பதவி நீக்கம் செய்ததாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications