ஒரு நாள் கூட லீவ் எடுக்காமல் வேலை செய்த இளைஞர்.. உறுப்புகள் செயலிழந்து பரிதாபமாக மரணம்! ஷாக்
பெய்ஜிங்: ஓவர் வேலை உடம்புக்கு ஆகாது என்பார்கள். இது ஏதோ காமெடிக்கு சொல்லப்பட்டது போலத் தெரிந்தாலும் அதிகமாக வேலை செய்வது நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இப்படி தான் சீனாவில் அதிகமாக வேலை செய்த இளைஞர் ஒருவர் உறுப்புகள் செயலிழப்பு காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அனைத்து அலுவலகங்களிலும் ஓவராக வேலை செய்யும் நபர் நிச்சயம் ஒருவராக இருப்பார். ஆபீசுக்கு முதல் நபராக வரும் இவர்கள், கடைசியாகத் தான் வெளியே செல்வார்கள்.

மரணம்: ஆனால், இப்படி ஓவராக வேலை செய்வது உடலில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறதாம். அப்படி தான் சீனாவில் ஒரு இளைஞர் ஓவராக வேலை செய்ததால் உயிரிழந்துள்ளார். அ'பாவோ என்ற அந்த 30 வயது இளைஞர், 104 நாட்கள் தொடர்ந்து வேலை செய்துள்ளார். இடையில் ஒரு ஒரு நாள் மட்டுமே விடுப்பு எடுத்துள்ளார். தொடர்ந்து 104 நாட்கள் வேலை செய்ததில் அந்த இளைஞர் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான செய்தியை அந்நாட்டின் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த அந்த 30 வயது இளைஞரின் பெயர் அ'பாவோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேநேரம் அவர் எந்த நிறுவனத்தில் வேலை செய்தார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜோஷன் பகுதியில் இவர் வேலை செய்து இருக்கிறார். பிப்ரவரி மாதம் முதலே இவர் தொடர்ச்சியாக வேலை செய்துள்ளார்.
என்ன நடந்தது: எந்தவொரு விடுப்பும் இல்லாமல் அவர் தொடர்ந்து வேலை செய்து வந்திருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவர் வார விடுமுறை கூட எடுக்கவில்லையாம். இடைப்பட்ட நாட்களில் அந்த நபர் ஏப்ரல் 6ம் தேதி ஒரே ஒரு நாள் மட்டுமே லீவ் எடுத்துள்ளார். நிறுவனத்திற்காகத் தீவிரமாக வேலை செய்து வந்த அ'பாவோவின் உடல்நிலை கடந்த மே 25ம் தேதி திடீரென பாதிக்கத் தொடங்கியுள்ளது.
ஓய்வு இல்லாமல் உழைப்பதால் களைப்பு காரணமாக இது ஏற்பட்டு இருக்கும் என முதலில் அவர் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அதன் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தே வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மிக மோசமான பாதிப்பு ஏற்படவே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். அவரது உடலின் பல பாகங்கள் செயலிழந்து போய் இருந்ததாம்.
ஷாக்: மே 28ம் தேதி அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனில்லாமல் அவர் கடந்த ஜூன் 1ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும், முதலில் அந்நாட்டின் சமூகப் பாதுகாப்பு அதிகாரிகள் வேலை காரணமாக அவர் உயிரிழக்கவில்லை என்றே கூறினர்.
அதாவது அவர் கடைசியாக வேலை செய்த நாள் மே 28.. அவர் உயிரிழந்தது ஜூன் 1ம் தேதி.. வேலை காரணமாக ஏற்பட்ட மரணம் என வகைப்படுத்த வேண்டும் என்றால் கடைசியாக வேலை செய்த நாளில் இருந்து 48 மணி நேரத்திற்குள் மரணம் ஏற்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அ'பவோ 3 நாட்களுக்கு பிறகே உயிரிழந்ததால் அதை வேலை சார்ந்த மரணமாக வகைப்படுத்த முடியாது என அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
அலட்சியத்தின் உச்சம்: இருப்பினும், இதை ஏற்க மறுத்த அ'பவோ, வேலை காரணமாகவே அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சாடினர். 104 நாட்கள் விடுப்பு இல்லாமல் வேலை செய்ததை அதிகாரிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்று விமர்சித்தனர். மேலும், இது தொடர்பாக அவர்கள் வழக்கும் தொடர்ந்தனர். எந்த நிறுவனத்திற்காக இவர் ஓடி ஓடி உழைத்தாரோ, அதே நிறுவனம் இவரது தரப்பிற்கு எதிராக ஆஜரானது. அ'பவோவை அதிக நேரம் வேலை செய்ய தாங்கள் சொல்லவில்லை என்றும் அவராகவே விருப்பப்பட்டு ஓவர்டைம் பார்த்தாக தெரிவித்தது.
இருப்பினும், நீதிமன்றம் வேறுபட்ட முடிவை எடுத்தது. அ'பவோ மரணத்திற்கு 20 சதவிகிதம் சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பு என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதனால் அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடாக 4,00,000 யுவான், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 47 லட்சத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அ'பவோவின் மரணம் கடந்தாண்டு நடந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இப்போது அது பேசுபொருள் ஆகியிருக்கிறது.












Click it and Unblock the Notifications