‛மாஸ்டர் ஸ்ட்ரோக்’.. மனதை மாற்றி கொலம்பியாவை, பாகிஸ்தானுக்கு எதிராக திருப்பிய சசிதரூர்
பகோடா: காங்கிரஸ் எம்பி சசிதரூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்த கொலம்பியாவின் நிலைப்பாட்டை மாற்றி உள்ளார். காஷ்மீரில் என்ன நடந்தது என்பது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டோம். இதனால் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு கூறிய இரங்கலை கொலம்பியா திரும்ப பெற்றுள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானை பந்தாடியது. ஏவுகணைகளை வீசி பயங்கரவாதிகளின் முகாம்கள், விமான தளம், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன.

அடி தாங்க முடியாத பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இருப்பினும் பாகிஸ்தான் பொய்களை பரப்பி வருகிறது. இதனை முறியடிக்கவும், ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி எடுத்துக்கூறவும் வெளிநாடுகளுக்கு 7 எம்பிக்கள் குழுக்கள் சென்றுள்ளன.
இதில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் தலைமையிலான குழுவினர் பனாமா, கயானா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு கொலம்பியா சென்றனர். கொலம்பியாவில் சசிதரூர், ‛‛ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானில் உயிரிழந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்தது ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நடவடிக்கை என்பது பயங்கரவாதிகளை அனுப்புபவர்களுக்கும், பயங்கரவாதிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளுபவர்களை ஒன்று போல் நடத்துவதாக உள்ளது. நாங்கள் தற்காப்புக்காக மட்டுமே நடவடிக்கையை எடுக்கிறோம்'' என்றார்.
நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பாகிஸ்தானில் இறந்தவர்களுக்கு கொலம்பியா இரங்கல் தெரிவித்து இருந்ததை குறிப்பிட்டு தான் சசிதரூர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தான் பாகிஸ்தானுக்கு கூறிய இரங்கல் செய்தியை கொலம்பியா திரும்ப பெற்றுள்ளது. சசிதரூர் தலைமையிலான குழுவினர் கொலம்பியாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரோசா யோலண்டா விலாவிசென்சியோவை சந்தித்து ‛ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் பாகிஸ்தான் பயங்கரவாதம் தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
அதன்பிறகு கொலம்பியா அமைச்சர் ரோசா யோலண்டா விலாவிசென்சியோ கூறுகையில்,‛‛இன்று எங்களுக்கு முழு விளக்கம் கிடைத்தது. காஷ்மீரில் என்ன நடந்தது என்பது பற்றி உண்மை நிலையை அறிந்து கொண்டோம். தொடர்ந்து பேசி வருகிறோம்'' என்றார். மேலும் பாகிஸ்தானுக்கு கூறிய இரங்கல் செய்தியை திரும்ப பெற்றுள்ளது கொலம்பியா.
இதுபற்றி சசிதரூர் எம்பி கூறுகையில்,‛‛கொலம்பியாவின் வெளியுறவு துணை அமைச்சர் பாகிஸ்தானுக்கான இரங்கல் ஸ்டேட்மென்டை திரும்ப பெற்றுள்ளார். நாம் கொடுத்த விளக்கத்தை புரிந்து கொண்டு அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார். நமக்கு உண்மையாக மதிப்பளித்து இதனை கொலம்பியா செய்துள்ளது'' என்றார். இது நம் நாட்டுக்கு கிடைத்த வெற்றியாகும்.
சசிதரூர் தலைமையிலான குழுவின் கொலம்பியா பயணம் இன்று முடிவுக்கு வருகிறது. அவர்கள் கொலம்பியாவில் இருந்து இன்று பிரேசில் புறப்பட்டு செல்கின்றனர். அதன்பிறகு கடைசியாக அமெரிக்கா செல்ல உள்ளனர். இந்த குழுவில் சசிதரூர் தலைமையிலான எம்பிக்கள் குழுவில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சர்ப்ராஸ் அஹமது தெலுங்கு தேசம் கட்சியின் ஜிஎம் ஹரிஷ் பாலயோகி, பாஜகவை சேர்ந்த ஷஷாங்க் மணி திரிபாதி, புவனேஸ்வர் கலிதா, தேஜஸ்வின சூர்யா, சிவசேனாவின் மிலிண்ட் தியோரா உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications