பிறந்து 30 மணி நேரத்தில் குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. சீனாவில் பெரும் சோகம்
Recommended Video
பெய்ஜிங்: சீனாவின் வுஹான் நகரில் வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு பிறந்த குழந்தைக்கு , பிறந்து 30 மணி நேரத்திற்குப் பிறகு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டதாக சீன அரசு ஊடகங்கள் அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500ஐ நெருங்கி உள்ளது. 24000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சீனாவின் வுகான் உள்ளிட்ட நகரங்களில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கடந்த டிசம்பரில் உயிர் பலியை தொடங்கிய கொரோனா வைரஸ் அதன் வீரியத்தை ஜனவரியில் காட்ட ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாயிடம் இருந்து
இந்நிலையில் வுகானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தைக்கு, பிறந்த 30 மணி நேரம் கழித்து கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். தாயிடம் இருந்து நேரடியாக பரவி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். கர்ப்ப காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு தொற்று பரவி இருப்பதை இது குறிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தாக்கியது
இதனிடையே குழந்தை பெற்றுக்கொள்ளும் முன்பு தாயை பரிசோதித்த போது அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அதன்பிறகு அந்த குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க கடுமையாக மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் பிறந்த 30 மணி நேரத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு குழந்தைக்கு ஏற்பட்டதை சோதனையில் கண்டுபிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிப்பு இல்லை
முன்னதாக சின்குவா செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியின் படி, கடந்த வாரம் ஒரு தாய்க்கு கொரோனா வைரஸ் தாக்கியிருந்த நிலையில், அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவித்தது. இதனால் குழந்தைக்கு தாயிடம் இருந்து பரவாது என்று நினைத்த நிலையில் கொரோனா வைரஸ் இப்போது குழந்தைக்கு தாயிடம் இருந்து பரவி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறைச்சி கூடம்
இறைச்சிகளை வெட்டி விற்கும் வுஹான் இறைச்சி சந்தையில் இருந்து தான் இந்த நோய் டிசம்பரில் தோன்றியதாக நம்பப்படுகிறது, மேலும் ஜனவரி மாதத்தில் சந்திர புத்தாண்டு விடுமுறைக்கு மக்கள் பயணித்தபோது இந்த நோய் வேகமாக பரவியது. கூட்டம் கூட்டமாக மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட இது காரணமாக சொல்லப்படுகிறது
யார் அதிகம் சாவு
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் செவ்வாயன்று வெளியிட்ட தகவலின்படி, கொரோனா வைரஸால் அதிகபட்சமாக 90வயதுடைய நபர் பாதிக்கப்பட்டார். உயிரிழந்தவர்களில் 80 சதவீதம் பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நோயாளிகள் என்பது தெரியவந்துள்ளது. இளம் வயதினர் 20 சதவீதம் பேர் இதுவரை இறந்துள்ளனர்.