தவறு செய்துவிட்டோம்.. கொரோனா பலி எண்ணிக்கையை திடீர் என்று 50% உயர்த்திய சீனா.. ஒரே நாளில் என்ன ஆனது?
கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
பெய்ஜிங்: கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. உலக நாடுகளை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Recommended Video
சரியாக 5 மாதங்களுக்கு முன்பு கடந்த டிசம்பர் 1ம் தேதி சீனாவின் வுஹன் பகுதியில் முதல் நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. அப்போது தொடங்கிய பிரச்சனை தற்போது உலகம் முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலகம் முழுக்க 180 நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கி உள்ளது.
மிக மிக சிறிய தீவுகள் கூட கொரோனா வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. முதல் முதலில் கொரோனா பாதித்த சீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வர தொடங்கி உள்ளது.

சீனாவில் நிலை என்ன?
சீனாவில் கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் நேற்று வரை 82341 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று வரை 3342 பேர் பலியாகி இருந்தனர். சீனாவில் 77,663 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு 1156 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.நேற்று புதிதாக 351 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. அங்கு மீண்டும் கொரோனா செகண்ட் வேவ் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

ஒரே நாளில் உயர்த்தி உள்ளது
இந்த நிலையில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கையை ஒரே நாள் இரவில் 50% உயர்த்தி சீன அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதாவது வுஹனில் மட்டும் இந்த எண்ணிக்கை மாற்றம் செய்துள்ளது. வுஹனில் 1290 பேர் கூடுதலாக பலியானதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் வுஹனில் மட்டும் 3869 பேர் பலியானதாக எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக சீனாவில் 4,632 பேர் பலியாகி உள்ளனர்.

உலக நாடுகளின் அழுத்தம்
இதற்கு முன்பே சீனா கொரோனா பலி எண்ணிக்கையை மறைக்கிறது என்று புகார் வந்தது. சீனா உண்மையான பலி எண்ணிக்கையை சொல்லவில்லை. அங்கு இன்னும் பலர் பலியாகி இருக்கலாம். ஆனால் சீனா உலக நாடுகளின் மத்தியில் தங்கள் மதிப்பை உயர்த்த வேண்டும் என்று பலி எண்ணிக்கையை குறைத்து காட்டியுள்ளது. கொரோனா குறித்த உண்மையை மறைத்தது போல தற்போது கொரோனா பலி எண்ணிக்கையையும் சீனா மறைக்கிறது என்று புகார் வந்தது.

மக்கள் எதிர்ப்பு
அதேபோல் அந்நாட்டு மக்கள் சிலரும் இந்த புகாரை வைத்து வந்தனர். எங்கள் உறவினர்கள் கொரோனா காரணமாக பலியானார்கள். ஆனால் அதை அரசு கணக்கில் எடுக்கவில்லை. எங்கள் உறவினர்களின் மரணத்தை அரசு மறைக்கிறது என்று அந்நாட்டு மக்கள் தெரிவித்தனர். இதனால் சீன அரசுக்கு எதிராக அழுத்தம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. சீன அரசு என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வந்தது.

எண்ணிக்கையை உயர்த்தியது
இந்த நிலையில் சீனா ஒரே நாள் இரவில் பலி எண்ணிக்கையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கணக்கு சரியாக பார்க்கவில்லை. சிலரின் மரணத்தை கணக்கில் சேர்க்கவில்லை. மருத்துவமனைகள் சில இப்போதுதான் மரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. சிலர் வீடுகளில் மரணம் அடைந்துள்ளனர். எல்லோரையும் சேர்த்து இப்போது புதிய பலி எண்ணிக்கையை வெளியிட்டு இருக்கிறோம், என்று சீனா அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications