கஷ்டமாக உள்ளது.. இது 'சீனாவின் மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை'... அதிபர் ஜி ஜின்பிங்
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் "மிகப்பெரிய பொது சுகாதார அவசரநிலை" என்று அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்துள்ளது அத்துடன் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் கிட்டத்தட்ட 77,000 ஐ தாண்டி உள்ளது.
கொரோனா வைரஸால் மோசமான பாதிப்புக்குள்ளான அனைத்து நோயாளிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் சிகிக்சை அளித்து வருகிறார்கள். கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் மேலும் 97 பேர் இறந்தனர் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
அதிபர் தலைமையில்
இந்த சூழ்நிலையில் COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், தடுக்கவும் என இரட்டை முயற்சிகளுக்காக சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனை கூட்டம் பெய்ஜிங்கில் இன்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு சீனப் பிரதமர் லி கெக்கியாங் தலைமை தாங்கினார்.. இதில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் பங்கேற்றார்கள்.
மிகப்பெரிய சோதனை
இந்த கூட்டத்தில் பேசிய அதிபர் ஜி ஜின்பிங், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மிக வேகமாக பரவுகிறது, இதை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் மிகவும் கடினமாக உள்ளது. இது எங்களுக்கு ஒரு நெருக்கடி, இது ஒரு மிகப்பெரிய சோதனை. இந்த கொரோனா வைரஸ் தொற்று என்பதை சீனாவின் மிகப்பெரிய சுகாதார அவசர நிலையாக அறிவிக்கிறேன்" என்றார்.
பொருளாதாரம் பாதிக்கும்
தொற்றுநோய் "தவிர்க்க முடியாமல் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று சீன அதிபர் ஜின்பிங் ஒப்புக் கொண்டார், ஆனால் அதன் விளைவுகள் "குறுகிய கால" மற்றும் கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இனிடையே சீனாவில் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல பொருட்களின் உற்பத்தி தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நடக்குமா மீண்டும்
சீனாவில் தற்போதைய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது, கட்டுப்படுத்துவது என்பது பெரும் சவாலாக உள்ளது. என்னதான் சுகாதாரத்துறை அதிகாரிகள் இரவு பகலாக பணியாற்றி அதன் பாதிப்பை தடுக்க போராடினாலும், சங்கிலித்தொடர் போல் பரவும் இந்த மனித கொல்லி வைரஸ் அங்குள்ளவர்களிடையே பெரும் அச்சத்தையே விதைத்துள்ளது. இதில் இருந்து மீண்டு வர இயற்கை ஏதேனும் அதிசயத்தை நிகழ்த்த வேண்டும். ஏனெனில் 2002ல் பரவிய சார்ஸ் நோய்க்கும் இன்று மருந்து இல்லை. ஆனால் கொஞ்ச காலத்திற்கு பிறகு மாயமாய் மறைந்தது. அது போல் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.