புதிய தலாய் லாமா தேர்வில்.. சீனாவுக்கு இடமில்லை.. 14ம் தலாய் லாமா திட்டவட்டம்! காட்டமான அறிக்கை
திபெத்: புத்த மதத் தலைவராகக் கருதப்படும் தலாய் லாமா சில நாட்களில் 90வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதற்கிடையே அவருக்குப் பிறகு புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் விஷயத்தில் சீனா தலையிடலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள தலாய் லாமா, மரபுபடியே புதிய தலாய் லாமா தேர்வு இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
புத்த மத தலைவரும் திபெத் ஆன்மீகத் தலைவரான தலாய் லாமா வரும் ஜூலை 6ம் தேதி தனது 90வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இவர் புத்த மதத்தின் 14ஆவது தலாய் லாமாவாக கருதப்படுகிறார். பொதுவாக ஒரு தலாய் லாமா மறைவின் பொது அடுத்த தலாய் லாமா தேர்வு செய்யப்படுவார்கள். 600 ஆண்டுகளாக இதே நடைமுறை தான் தொடர்கிறது.

சீனா
ஆனால், இந்த முறை தலாய் லாமா தேர்வு செய்யும் விவகாரத்தில் சீனா தலையிடலாம் எனச் சொல்லப்பட்டது. புதிய தலாய் லாமா தேர்வு குறித்து சீனா கூறிய கருத்துகளே இதற்குக் காரணமாகும். இந்தச் சூழலில் தான் தலாய் லாமா இந்த விவகாரத்தில் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். தனது மறைவுக்குப் பிறகும் 600 ஆண்டு பழமையான இந்த அமைப்பு தொடரும் என்றும், தனது அடுத்த மறுபிறப்பை அதுவே தேர்ந்தெடுக்கும் என்றும் கூறியுள்ளார். 15வது தலாய் லாமாவை நியமிக்கும் அதிகாரம் சீனாவுக்குப் போகாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தலாய் லாமா
இது தொடர்பாக 14வது தலாய் லாமா புதன்கிழமை அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது மறைவுக்குப் பிறகு, தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ அலுவலகமான கடென் போட்ராங் அறக்கட்டளையே 15வது மறுபிறப்பை அங்கீகரிக்கும் என்று அறிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "கடந்த 2011 செப்டம்பர் மாதம் 24ம் தேதியே புதிய தலாய் லாமாவை அங்கீகரிப்பதற்கான நடைமுறை குறித்துத் தெளிவாக விளக்கி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது..
தலாய் லாமாவின் அலுவலகமான கடென் போட்ராங் அறக்கட்டளையின் உறுப்பினர்களுக்கே அந்தப் பொறுப்பு (புதிய தலாய் லாமாவை தேர்வு செய்வது) உள்ளது. அவர்கள் திபெத்திய பௌத்த மரபுகளின் பல்வேறு தலைவர்களையும், தலாய் லாமாக்களின் பரம்பரையுடன் பிணைந்துள்ள பாதுகாவலர்களையும் கலந்தாலோசிக்க வேண்டும். கடந்த கால மரபுகளுக்கு ஏற்ப தேடல் மற்றும் அங்கீகார நடைமுறைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
யாருக்கும் அதிகாரம் இல்லை
எதிர்கால மறுபிறப்பை அங்கீகரிக்கும் முழு அதிகாரம் கடென் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது என்பதை இதன் மூலம் மீண்டும் வலியுறுத்துகிறேன். இந்த விஷயத்தில் தலையிட வேறு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை" என்று தெரிவித்தார். சீனா என்ற வார்த்தையை அவர் குறிப்பிடவில்லை என்ற போதிலும், எதிர்காலத்தில் புதிய தலாய் லாமாவை தேர்வு செய்யும் பொறுப்பு கடென் போட்ராங்கிற்கு மட்டுமே இருக்கிறது.. வேறு யாருக்கும் இல்லை என்பதை மிகத் தெளிவாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி
1959ஆம் ஆண்டு லாசாவில் சீன ஆட்சிக்கு எதிராக தலாய் லாமா குரல் கொடுத்தார். இருப்பினும், அது தோல்வியில் முடிந்த நிலையில், அவர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு ஆயிரக்கணக்கான திபெத்தியர்களுடன் அவர் நாடுகடத்தப்பட்டு வாழ்ந்து வருகிறார். சீனா அவரை பிரிவினைவாதி என்றும் கிளர்ச்சியாளர் என்றும் முத்திரை குத்துகிறது. ஆனால் தலாய் லாமா வன்முறையற்ற தன்மை, கருணை மற்றும் திபெத்தியர்கள் தங்கள் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் ஆகியவற்றின் சின்னமாக விளங்குகிறார்.
திபெத்திய பாரம்பரியத்தின்படி, ஒரு மூத்த புத்தத் துறவியின் ஆன்மா அவரது மரணத்திற்குப் பிறகு மறுபிறவி எடுக்கிறது. அதாவது தலாய் லாமா இறந்த பிறகு மறுபிறவி எடுப்பார் என்பதை நம்புகிறார்கள். இப்போது 14வது தலாய் லாமாவாக இருப்பவர் 1935ம் ஆண்டு வடகிழக்கு திபெத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் லாமோ தோண்டப் என்ற பெயரில் பிறந்தவர். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவர் 13வது தலாய் லாமாவின் மறுபிறவியாக அடையாளம் காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications