நாடு எதிர் நோக்கியுள்ள சவால்களில் வெற்றி காண வேண்டும்... மோடிக்கு தலாய்லாமா வாழ்த்து
தர்மசாலா: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராக அமரப் போகும் மோடிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய்லாமா.
16வது லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மோடியும் தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி விரைவில் பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. எனவே, மோடிக்கு பல்வேறு நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், திபெத்திய புத்த மதத்தலைவரான தலாய்லாமாவும் மோடிக்கு கடிதம் வாயிலாக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்

அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
‘வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடுகளில் உதாரணமாக திகழ்வது இந்தியா. உலகில் உள்ள பல மதத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வசித்து வருகிறார்கள்.
குஜராத் மாநிலம் தங்கள் தலைமையில் நல்ல வளர்ச்சியும், வளமையும் பெற்று திகழ்கிறது. அதேபோல் இந்தியா திகழ வாழ்த்துகிறேன். பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்க உள்ள தாங்கள், நாட்டை எதிர்நோக்கியுள்ள சவால்களையும், மக்களின் நம்பிக்கையையும் நிறைவேற்றுவதில் வெற்றி காண வேண்டும்'.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications