ரூ.6,281 கோடி.. ஈரான் போரில் இஸ்ரேலுக்கு ஒரு நாளைக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா? தலைசுற்றுதே
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே போர் கடுமையாக நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஈரானுக்கு எதிராக போர் புரிய இஸ்ரேல் ஒரு நாளைக்கு செலவிடும் தொகை பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி இஸ்ரேலுக்கு ஒருநாளைக்கு ரூ.6,281 கோடி செலவாவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் ஒரு புறம் காசாவில் போர் புரிந்து வருகிறது. இப்போது ஈரானுடன் மோதி வருகிறது. இஸ்ரேல் - ஈரான் மோதல் தொடங்கி ஒரு வாரம் நிறைவு பெற்ற நிலையில் தற்போது அது போராக மாறி உள்ளது. இருநாடுகளும் மாறி மாறி ஏவுகணைகளால் தாக்கி வருகின்றன.

இதில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 628 பேர் வரை பலியாகி உள்ளனர். அதேவேளையில் ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் 28 பேர் மட்டுமே பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளையில் ஈரான், இஸ்ரேலில் அதிகமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. அதில் ஈரானை ஒப்பிடும்போது இஸ்ரேலில் குறைந்த அளவில் மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு இஸ்ரேல் வசம் உள்ள வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் தான். அயன்டோம், ஆரோ உள்ளிட்ட வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் ஈரானின் ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழிக்கின்றன. இருப்பினும் சில ஏவுகணைகள் மட்டுமே இஸ்ரேலில் உள்ள கட்டடங்களை தாக்குகின்றன. ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து இஸ்ரேல் தப்பித்தாலும் கூட தினமும் அந்த நாடு பல ஆயிரம் கோடிகளை செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அதன்படி ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைக்கு மட்டும் ஒரு நாளைக்கு ரூ.6,281 கோடியை செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மூத்த ராணுவ அதிகாரியும், இஸ்ரேல் பாதுகாப்பு படை தலைமை அதிகாரியின் மாஜி நிதி ஆலோசகருமான ஜெனரல் (ரெஸ்.) ரீம் அமினாச் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: ஈரானுக்கு எதிரான சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளின் முதல் 48 மணி நேரத்தில் இஸ்ரேல் 1.45 பில்லியன் டாலர்களை(ரூ.12,035 கோடி) செலவிட்டுள்ளது.
தொடக்கத்தில் வான்வழித் தாக்குதல்கள், விமான பயண நேரம், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகள் உள்ளிட்டவற்றுக்கு மட்டும் சுமார் 593 மில்லியன் டாலர் (ரூ.5,136 கோடி) செலவாகி உள்ளது. ஏவுகணை இடைமறிப்பு மற்றும் படை வீரர்களை விரைவாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்வது உள்ளிட்டவற்றுக்கு ஆன செலவு தனியாகும். தற்போது நிலவும் சூழல் தொடரும் பட்சத்தில் ஈரானுடன் மோதலால் இஸ்ரேலுக்கு ஒரு நாளைக்கு 725 மில்லியன் டாலர் (ரூ.6,281 கோடி)செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது ராணுவம் சார்ந்த நேரடி செலவுகள் மட்டுமே. சேத மதிப்பு, மக்களுக்கான உணவு, இருப்பிடம் தொடர்பானவை இதில் அடங்காது'' என்று கூறியுள்ளார்.
மேலும் காசா போர் செலவு பற்றி ‛கால்காலிஸ்ட்' (Calcalist) என்ற பத்திரிகையும் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இந்த பத்திரிகை இஸ்ரேலின் தொழில் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை சேகரித்து வெளியிட்டு வருகிறது. அதில, ‛‛ஏற்கனவே இஸ்ரேல் அதிகமான பணத்தை காசா போருக்கு செலவிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் இறுதி காலம் வரை பார்த்தால் 67.5 பில்லியன் அமெரிக்கா டாலர் செலவாகி உள்ளது. இது ராணுவ நடவடிக்கைள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உதவி திட்டங்கள் உள்ளிட்டவை உள்ளடக்கியது. அதேபோல் காசா போரின் போது 3,00,000 க்கும் மேற்பட்ட ரிசர்வ் வீரர்கள் அழைக்கப்பட்டனர். இஸ்ரேலிய நிதி அமைச்சகம் ஒரு நாளைக்கு 1,00,000 வீரர்களுக்கு ஊதியம், தளவாடங்கள், உணவு மற்றும் தங்குமிடம் உட்பட ஒரு நாளைக்கு சுமார் 27 மில்லியன் டாலர் வரை செலவு செய்து வருகிறது. இதனால் வரும் காலத்தில் பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் அதிகரிக்கும். 2025ல் 31 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவை தொடும். இது போருக்கு முந்தைய எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்'' என்று தெரிவிக்க்பபட்டுள்ளது.
இஸ்ரேல் தற்போது ஒரே நேரத்தில் காசா, ஈரானை எதிர்த்து போர் புரிந்து வருகிறது. இதனால் இஸ்ரேல் அதிகளவிலான பணத்தை செலவழிக்கிறது. இது தொடரும் பட்சத்தில் இஸ்ரேலின் பொருளாதாரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தற்போது இஸ்ரேலின் உள்நாட்டு உற்பத்தி சரிவடைய தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஈரான் உடனான போர் என்பது இஸ்ரேலுக்கு இன்னும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications