ஜப்பான் பிரதமர் அலுவலக மொட்டை மாடியில் ஆளில்லா விமானம்... போலீஸ் விசாரணை
டோக்கியோ: ஜப்பானில் பிரதமர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் கேமராவுடன் ஆளில்லாத விமானம் ஒன்று தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5 அடுக்குகள் கொண்ட ஜப்பான் பிரதமர் அலுவலக மொட்டை மாடியில் ஆளில்லாத சிறிய ரக விமானம் ஒன்று நின்று கொண்டிருந்தது ஊழியர்கள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் அந்த விமானத்தைக் கைப்பற்றி சோதனை நடத்தினர். அப்போது அதில் சிறிய காமிரா ஒன்றும், பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றும் இருந்ததைப் போலீசார் கண்டறிந்தனர். இது தவிர வேறு ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்கள் ஏதும் அதில் இல்லை என ஜப்பான் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தற்போது இந்தோனேஷியாவில் இருக்கிறார். எனினும், பிரதமர் அலுவலக கட்டிடத்தில் ஆளில்லா விமானம் கண்டுபிக்கப்பட்டது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.