”என்னையும் சேர்த்து அவனுடன் புதைத்து விடுங்கள்” - கதறும் தந்தை; கலங்கடிக்கும் சிரிய குழந்தையின் சாவு
ரோம்: சிரியாவில் நடந்து வருகின்ற உள்நாட்டுப் போரினால் தப்பி வருகின்ற அகதிகள் மற்ற நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்ற நிலையில், சிரிய பிஞ்சு ஒன்று அகதிகள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்து கரை ஒதுங்கிய புகைப்படம் உலக நாடுகளின் பொட்டில் அறைவது போல உள்ளது.
சிரியாவில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் இருந்து தப்ப விரும்பும் மக்கள் அகதிகளாக தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
சிரியாவிலிருந்து கடல் மார்க்கமாக ஐரோப்பாவை அடைய முயற்சித்தவர்களில் 12 பேர் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரை உருக்கும் புகைப்படம்:
இது தொடர்பாக அந்நாட்டு செய்திகளில் வெளியான வீடியோவில் கரை ஒதுங்கிக் கிடக்கும் 3 வயது சிறுவனின் உடல் பார்ப்பவர்கள் கண்களில் நீரை வரவழைத்து கல் நெஞ்சையும் கரைப்பதாக அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கில் அகதிகள்:
சிரியாவில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இந்த ஆண்டில் ஆயிரக்கணக்கானோர் ஐரோப்பாவிற்கு சென்று தஞ்சம் புக கடல் வழியாக பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர். தற்போது இறந்தவர்கள் 12 பேருடன் சேர்ந்து மொத்தம் 23 பேர் துருக்கியிலிருந்து க்ரீஸ் செல்ல இரு படகுகளில் சென்றனர். இதில் 9 பேர் மட்டுமே பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வயதே ஆன குழந்தை:
அதில் ஒருவன்தான் மூன்று வயதே ஆன ஐலான். அவனோடு சேர்ந்து அவன் தாயும் 5 வயது அண்ணனும் நீரில் மூழ்கி இறந்தனர். முன்னரே இது போன்ற சம்பவங்கள் பல நிகழ்ந்திருந்தும் கூட தன் நாட்டிற்கு அகதிகளை அழைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டாமல் பிடியை இறுக்கியபடியே இருக்கிறார்கள் ஐரோப்பிய கொள்கை வகுப்பாளர்கள்.

மாற்றுமா இந்த மரணம்:
ஆனால் உயிரை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு புகலிடம் தேடி வரும் அகதிகள், தங்கள் நாட்டுக்குள் நுழைவதை கடுமையாக எதிர்க்கும் ஐரோப்பிய நாடுகளின் மனநிலையை வாழவேண்டிய இந்த இளம் பிஞ்சின் இந்த மரணமாவது மாற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...கத்தியும், ரத்தமுமே வீரமென்று நினைக்கும் நாடுகள் இந்தக் குழந்தைக்கு உயிரைத் திருப்பித் தர முடியுமா?

கொலை வெறி ஏன்:
இந்நிலையில் இறந்துபோன அக்குழந்தையும் தந்தை "என்னையும் அவனுடம் சேர்த்து எரித்துவிடுங்கள்" என்று கதறியது கொடுமையிலும் கொடுமை... உங்கள் போர்களால் இறந்து போனது அந்தக் குழந்தை மட்டுமல்ல நீங்களும்தான்... போர்களும், பணமும், பதவியும் ஒரு உயிரைத் திருப்பித் தரும் விலையை என்றுமே பெற்றதில்லை புரிந்து கொள்ளுங்கள்...

பூக்களைப் பறிக்காதீர்கள்:
வெள்ளைப் பூக்களை நீங்கள் மலரவைக்க வேண்டாம்.. மிஞ்சி இருக்கும் பூக்களையாவது ரத்தம் தூவி கசக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள்!












Click it and Unblock the Notifications