அந்தமானில் கடத்தப்பட்ட 8 ஜரவா இனப் பெண்கள் மீட்பு - கடத்தல்காரர்கள் கைது

இவர்கள் எட்டு பேரும் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அடர்ந்த காட்டுப் பகுதியிலிருந்து ஒரு கும்பலால் கடத்தப்பட்டு ஒரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 7 பேரை போலீஸார் கைது செய்திருப்பதாக அந்தமான் எஸ். பி சின்மய் பிஸ்வால் கூறியுள்ளார்.
அருகி வரும் இனக் குழுதான் இந்த ஜரவா என்பது குறிப்பிடத்தக்கது. ஹிரன் திக்ரி என்ற இடத்தில் இவர்களை அடைத்து வைத்திருந்த தகவல் கிடைத்ததும் ஜரவா இனத்தவரின் நலக்குழு ஒன்றும், போலீஸ் படையும் விரைந்து சென்று அவர்களை மீட்டன.
முதலில் நான்கு பெண்களையும், அவர்களுடன் தங்கியிருந்த 4 ஆண்களையும் போலீஸ் குழு மீட்டது. பின்னர் இன்னொரு பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 4 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
கடத்தல்காரர்கள் மீது ஜரவா இன மக்கள் கடும் கோபமடைந்து தாக்குதல் நடத்தினர். இருப்பினும் போலீஸார் தலையிட்டு அவர்களை மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண்களை ஜரவா இனத்தவரோடு, படகு ஒன்றில் போலீஸார் ஜாகோனா என்ற அடர்ந்த காட்டுப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் மீது கடத்தல், அந்தமான் காட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி- எஸ்டி சட்டத்தின் கீழும் வழக்குப் போட்டுள்ளனர்.
ஜரவா இனமானது அழியும் நிலையில் உள்ள ஒரு ஆதி அந்தமான் இனமாகும். இந்த இனத்தில் தற்போது மொத்தமே 417 பேர்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications