ஒன்றல்ல இரண்டல்ல 17 வருசம்.. ஜெயிலில் இருந்து தப்பிய இந்த கைதி எங்க ஒளிஞ்சிருந்தார் தெரியுமா?
பீஜிங்: சிறையில் இருந்து தப்பிச் சென்று 17 ஆண்டுகளாக குகையில் ஒளிந்து வாழ்ந்த கைதியை சீனப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணம் யோங்ஷான் நகரை சேர்ந்தவர் சாங் சியாங். பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தியதாக இவர் மீது கடந்த 2002ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இதனால் கைது செய்யப்பட்ட சாங் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சில நாட்களிலேயே சிறையில் இருந்து அவர் தப்பிச் சென்று தலைமறைவானார்.

போலீசார் எவ்வளவோ தேடியும் சாங்கை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவரைத் தேடி வந்தனர். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பார்களே அது போல, தற்போது 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சாங்கின் இருப்பிடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.
யோங்ஷான் நகரில் உள்ள ஒரு மலைப்பகுதியில் பதுங்கி இருப்பதை அவர்கள் தெரிந்து கொண்டனர். கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானம் மூலம் நடத்தப்பட தேடுதல் வேட்டையில், சாங் குகை ஒன்றில் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விரைந்து நேரில் சென்ற போலீசார், சாங்கை கைது செய்தனர்.
குகையை வீடாக பயன்படுத்திய அவர், ஆற்று நீரை பயன்படுத்தி, மரங்களை வெட்டி நெருப்பை உண்டாக்கி காட்டில் கிடைத்தவற்றை சமைத்து சாப்பிட்டு காட்டுவாசி போலவே வாழ்ந்து வந்துள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications