பிரான்ஸ்: கேஸ் பேக்டரியில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் - ஒருவர் தலை துண்டித்துக் கொலை
பாரீஸ்: பிரான்சின் தென் கிழக்கு பகுதியில் உள்ள கேஸ் பேக்டரி ஒன்றில் கையெறி குண்டுகளை வீசி கேஸ் சிலிண்டர்களை வெடிக்கச் செய்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதி ஒருவர் அப்பாவி நபரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார்.
பிரான்சின் தென் கிழக்கு பகுதியான கிரனோபல் அருகே உள்ள செயின்ட் குவென்டின் பாலாவியரில் கேஸ் பேக்டரி ஒன்று உள்ளது. அந்த பேக்டரிக்குள் ஒரு காரில் புகுந்த 2 ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி கேஸ் சிலிண்டர்களை வெடிக்கச் செய்தனர். இதில் பேக்டரி வளாகத்தில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அப்போது ஒரு தீவிரவாதி காரில் இருந்து இறங்கி பேக்டரி வளாகத்தில் இருந்த 30 வயது நபர் ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்தார். பேக்டரி வளாகத்தில் ஐஎஸ்ஐஎஸ் கொடியை நட்டு அதன் அருகில் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை போட்டுவிட்டு அவரது தலையை வேலியில் ரத்தம் சொட்ட சொட்ட தொங்கவிட்டார்.
இந்நிலையில் பேக்டரியின் பாதுகாவலர்களுக்கு தெரிந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 பேர் பலியாகினர்.
அந்த சம்பவம் நடந்த 6 மாதத்தில் பிரான்சில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது.