ஜெர்மனி பேஸ்புக் ஆபிஸ் மீது மர்ம கும்பல் தாக்குதல்... சுவரில் டிஸ்லைக் வாசகம் பதிவு!
பெர்லின்: ஜெர்மனியில் உள்ள பேஸ்புக் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல், அங்குள்ள சுவரில் 'டிஸ்லைக்' எனப் பதிவு செய்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் பேஸ்புக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு அங்கு கறுப்பு உடையணிந்த சுமார் 20 நபர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அலுவலகத்தின் ஜன்னல்களை சூறையாடிய அக்கும்பல், பேஸ்புக் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும், சுவற்றில் 'பேஸ்புக் டிஸ்லைக்' என எழுதியும் சென்றுள்ளதாக புலனாய்வு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பேஸ்புக் அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேஸ்புக்கின் ஐரோப்பிய பிரிவு தலைவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்ற குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டோனால்டு டிரம்ப்பின் பேச்சைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்னர், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், "மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக பேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு" எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, பேஸ்புக்கில் இனவெறி துவேஷப் பேச்சுக்களை நீக்காத தவறுக்காக வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய பேஸ்புக் நிறுவன நிர்வாக இயக்குநர் மார்ட்டின் ஓட் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications