2 இரவுகளாக உலுக்கிய நிலநடுக்கம்: பயத்தில் காரில் தூங்கும் ஜப்பானியர்கள்
டோக்கியோ: ஜப்பானில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து மக்கள் பயந்து கொண்டு கார்களில் தூங்கி வருகிறார்கள்.
ஜப்பானின் தென்மேற்கு தீவான கியூஷுவில் வியாழக்கிழமை இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் 9 பேர் பலியாகினர். நிலநடுக்கத்தை அடுத்து 100க்கும் மேற்பட்ட முறை ஆப்டர்ஷாக் எனப்படும் நிலஅதிர்வுகள் ஏற்பட்டது.
அந்த பயத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்தது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் விரிசல் அடைந்த கட்டிடங்கள் இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டபோது இடிந்து விழுந்தன.
இடிபாடுகளில் சிக்கி 41 பேர் பலியாகியுள்ளனர், 1,500 பேர் காயம் அடைந்துள்ளனர். குமாமோட்டோ நகரில் மட்டும் இடிபாடுகளில் சிக்கி 32 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் இரவு நேரத்தில் வீடுகளில் தூங்காமல் கார்களில் தூங்கியுள்ளனர். மீண்டும் நிலநடுக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பும் மனநிலையில் இல்லை.