30 வருடங்கள் ஆட்சி செய்தவர்.. மறைந்தார் எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்
கெய்ரோ: முன்னாள் எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக் காலமானார். அவருக்கு வயது 91. தொடர்ந்து 30 வருட காலமாக எகிப்தை ஆட்சி செய்த அவர், மக்கள் புரட்சியால் பதவியை இழந்தவர்.
ஹோஸ்னி முபாரக் 1972-1975 க்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்திய விமானப்படையின் தளபதியாக இருந்தார்.

1973 'அக்டோபர் 6' போரின் போது, இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களின்போது, எகிப்திய விமானப்படையின் தளபதியாக பணியாற்றிய இவர் பங்களிப்பு அபாரம். எனவே, முபாரக்கை பல எகிப்தியர்கள் மாபெரும் போர் ஹீரோவாகவே மதித்தனர். இஸ்ரேலிய தகவல் தொடர்பு தளத்தில் தாக்குதல் நடத்தியவர் என்றும் எகிப்து மக்களால் இவர் போற்றப்பட்டவர்.
முன்னாள் அதிபர் அன்வர் அல் சதாத் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்போது துணை அதிபராக இருந்த, ஹோஸ்னி முபாரக் அதிபராக பதவியேற்றார். தொடர்ந்து 30 வருடங்கள் அசராமல் ஆட்சி நடத்தினார்.
ஆனால், எந்த மக்கள் இவரை ஹீரோவாக வழிபட்டனரோ, அதே எகிப்திய பொதுமக்கள், லட்சக் கணக்கானோர் இவர் ஆட்சிக்கு எதிராக வீதிகளில் இறங்கினர். 18 நாள் தொடர் ஆர்ப்பாட்டங்களால், எகிப்து ஸ்தம்பித்தது. எனவே, வேறு வழியின்றி, 2011ம் ஆண்டு, பிப்ரவரி 11ம் தேதி, தனது அதிபர் பதவியை துறந்தார், ஹோஸ்னி முபாரக்.
நவீன எகிப்திய அரசின் நிறுவனர் முஹம்மது அலி பாஷா. அவருக்கு பிறகு அதிக காலம் எகிப்தின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர் ஹோஸ்னி முபாரக்தான். அடிப்படைவாதிகளால் நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களில் உயிர் தப்பி 91 வயது வரை வாழ்ந்து முடித்துள்ளார் ஹோஸ்னி முபாரக்.
2005 ஆம் ஆண்டில், முபாரக் அரசு, ஜனநாயகத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று அமெரிக்கா கடும் அழுத்தம் கொடுத்தது. எனவே அவர் அதிபர் தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிட அனுமதித்தார். இருப்பினும் அபார வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் போட்டியிட்டு 2வது இடத்தை பிடித்த, அய்மான் நவுர் என்பவரை, மோசடி குற்றச்சாட்டில் சிறையில் அடைத்தார்.
இந்த தேர்தலுக்கு முன்னர், முபாரக் மூன்று முறை போட்டியின்றி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதிபராக இருந்த 30 ஆண்டுகளில், அவர் துணை அதிபரை நியமித்ததே இல்லை. ஆனால், எதிர்ப்பாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாக, கடைசி காலத்தில், முன்னாள் புலனாய்வுத் தலைவர் ஒமர் சுலைமானை துணை அதிபராக நியமித்து 2011ம் ஆண்டு ஜனவரி உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால், எதிர்ப்பு ஓயவில்லை. எனவே, மறு மாதமே, அதாவது, பிப்ரவரியில் முபாரக்கின் ராஜினாமாவை அறிவித்தவர் சுலைமான் தான்.
சட்டவிரோதமாக இஸ்ரேலுக்கு எரிவாயுவை விற்றார், எதிர்ப்பாளர்களைக் கொன்று குவித்தார் போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது குவிந்தன. ஆனால் விசாரணையின்போது, இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து, முபாரக் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
வெகு காலமாக, நோய்வாய்ப்பட்டு, வெளியுலக தொடர்பு இல்லாமல் இருந்தார் முபாரக். ஆனால், 2019, அக்டோபர் மாதம், முபாரக் 25 நிமிட வீடியோவில் தோன்றி, 1973 அரபு-இஸ்ரேலியப் போரைப் பற்றிய தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications