"காப்பாத்துங்க ப்ளீஸ்.." கதறியும் யாரும் வரவில்லை.. அப்பாவி பெண்ணை முகத்திலேயே குத்திய போதை லேடீஸ்
இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண்கள் 4 பேர் செய்த கொடூர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மதுபோதை காரணமாக இங்குப் பலரது குடும்பம் சீரழிகிறது. மது குடித்துவிட்டு வரும் கணவர்களால் அந்த குடும்பத்தின் நிம்மதியேப் போகிறது.
இதனால் மதுவுக்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்பதை ஒரு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு தரப்பினர் அதைத் தனி நபர் சுதந்திரம் என்றும் கூறி வருகின்றனர்.

மது போதை
மது தொடர்பாக இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக விவாதங்கள் இருந்தே வருகிறது. இந்தியாவில் பீகார், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதர மாநிலங்களில் மதுவுக்குத் தடை எதுவும் இல்லை.. இதனிடையே மது போதையில் இளம் பெண்கள் நடுரோட்டில் செய்த கொடூரத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேச தலைநகர் இந்தூரில் தான் அரங்கேறி உள்ளது.

4 பெண்கள்
அந்த வீடியோவில் நான்கு பெண்கள் மற்றொரு பெண்ணை நடு ரோட்டில் வைத்து கொடூரமாகத் தாக்குகின்றனர். அந்த 4 பெண்களும் குடித்துவிட்டு மது போதையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. நான்கு பேரும் சேர்ந்து கொண்டு பாதிக்கப்பட்ட பெண்ணை சுற்றி வளைத்து கொடூரமாகத் தாக்குகின்றனர். முகத்திலேயே குத்தியும் காலால் உதைத்தும் கொடூரமாகத் தாக்குகின்றனர். இவை அனைத்துமே அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகி உள்ளது.

கெஞ்சியும் விடவில்லை
இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. குடித்திருக்கும் அவர்கள் அந்த அப்பாவி பெண்ணை கொடூரமாகத் தாக்குகின்றனர். அந்த பெண் விட்டு விடும்படி கெஞ்சுவதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மேலும், யாராவது உதவும்படியும் அந்த பெண் கதறுகிறார். சுற்றி இருக்கும் நபர்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்தார்களே தவிர யாருமே அந்த அப்பாவி பெண்ணை காக்க முன்வரவில்லை.

வழக்குப்பதிவு
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், இது குறித்து இந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக எம்ஐஜி காவல் நிலையப் பொறுப்பாளர் அஜய் வர்மா கூறுகையில், "பாதிக்கப்பட்ட அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மேகா மாளவியா, டினா சோனி, பூனம் அஹிர்வார் உள்ளிட்ட 4 பெண்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

பீட்சா கடை சண்டை
மதுபோதையில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது முதல்முறை இல்லை. சில நாட்களுக்கு முன், இப்படித்தான் கர்நாடகா மணிப்பாலில் உள்ள பீட்சா கடை ஊழியர்களை மது போதையில் இருந்த ஒரு தம்பதியினர் கொடூரமாகத் தாக்கினர். மதுபோதையில் வந்த அவர்கள் பீட்சா ஆர்டர் செய்து பிரச்சினையில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களை ஊழியர்கள் வெளியேறச் சொன்ன நிலையில், திடீரென அந்த தம்பதி ஊழியர்களைத் தாக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications