ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் 100 பிரம்படி கிடைக்கும்... இங்கல்ல, இந்தோனேசியாவில்!
ஆச்சே: இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையாக பொது இடத்தில் வைத்து நூறு பிரம்படி வழங்கும் சட்டம் அமலுக்கு வந்தது.
இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணத்தில் ஓரினச் சேர்க்கை உறவை தடை செய்து சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 100 பிரம்படி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்கு முன்னதாக வெளியில் பாலுறவை வைத்துக்கொள்பவர்களுக்கும் இதே தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு ஆச்சே பகுதியில் பிரிவினைவாதிகள் போரை நிறுத்துவதற்காக அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி இஸ்லாமியர்களின் கடுமையான சட்டமான ஷரியாவை அங்கு நடைமுறைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, கள்ளத்தொடர்பு வைத்திருப்போருக்கு கசையடி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. இதேபோல, சூதாட்டம், மது அருந்துவது போன்றவற்றுக்கும், வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வராதவர்கள் மற்றும் இறுக்கமான உடைகளை அணியும் பெண்களுக்கும் பொது இடத்தில் வைத்து சாட்டையடி தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது.
ஆச்சே மாகாணத்திற்கு வருகைத்தரும் வெளிநாட்டவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தவர்கள் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கும் பாரபட்சமின்றி இந்தத் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷரியா சட்டம் அமுலிலுள்ள ஆச்சே மாகாணத்தில் கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த புதிய சட்டம் காரணமாக வெறுப்புத் தன்மை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவர்களுக்கு ஏற்படும் அதேவேளையில், அவர்கள் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகக்கூடும் எனவும் மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் இந்தோனேசியாவின் ஏனையப் பகுதிகளில் ஓரினச் சேர்க்கை உறவுக்கு இதுவரை தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications