காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்திற்கு ஹமாஸ்- இஸ்ரேல் சம்மதம்
காஸா: பாலஸ்தீனத்தின் காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
காஸா பகுதி மீது கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல் வெறியாட்டத்துடன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பிஞ்சு குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள்தான் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து எகிப்தின் முன் முயற்சியில் அவ்வப்போது யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே உருவாக்கப்பட்ட 72 மணி நேர யுத்த நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து இருதரப்பும் மீண்டும் தாக்குதல்களை தீவிரமாக்கின.
இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது 51 முறை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் பலியாகினர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக மீண்டும் இஸ்ரேல் விமானங்கள் காஸா பகுதியில் குண்டு வீச்சில் ஈடுபட்டன. ஒரே நாளில் 20 இடங்களில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் மத்திய காஸாவில் 17 வயது மாணவர் உள்பட 10 பேர் பலியாகினர்.

2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலி
மேலும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 வயது பாலஸ்தீனிய சிறுவன் உயிர் இழந்தான். கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் நடத்தி வரும் வெறியாட்டத்தில் மொத்தம் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

67 இஸ்ரேல் ராணுவத்தினர் பலி
இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 67 பேர் பலியாகி உள்ளனர். இதில் இஸ்ரேல் ராணுவத்தினர் அதிக அளவில் பலியாகி உள்ளனர்.

இஸ்ரேல் திட்டவட்டம்
இந்த நிலையில், டெல்அவிவ் நகரில் நேற்று நடந்த ராணுவ அமைச்சக கூட்டத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் இயக்கத்தினருடன் இனிமேல் சமரச முயற்சி மேற்கொள்ளப்படமாட்டாது; விமான தாக்குதல் தொடரும் என்றும் அறிவித்தார்.

ஹமாஸ் பதிலடிக்கு மும்முரம்
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் இயக்கத்தினரும் யுத்த நிறுத்தம் செய்யமாட்டோம் என அறிவித்தனர்.

எகிப்து யோசனை ஏற்பு
இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கம் இடையே யுத்த நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பாக எகிப்து குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதன்பிறகு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பாலஸ்தீன பிரதிநிதி ஒருவர் கூறுகையில், மேலும் 72 மணி நேரம் போர்நிறுத்தம் செய்யுமாறு எகிப்து குழுவினர் தெரிவித்த யோசனையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

இஸ்ரேலும் ஒப்புதல்
பின்னர் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் காஸா பகுதியில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து அங்கு நிரந்தர யுத்த நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications