ஸ்காட்லாந்து நாட்டில் செக்ஸ் புகாரில் கைதான மல்யுத்த நடுவர் சஸ்பெண்ட்! மல்யுத்த கூட்டமைப்பு அதிரடி
கிளாஸ்கோ: இந்திய விளையாட்டு நிர்வாகிகள் இருவர் ஸ்காட்லாந்தில் ஏன் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது நடவடிக்கையை தொடர்ந்து மல்யுத்த சர்வதேச நடுவரான வீரேந்தர் மாலிக்கை சஸ்பெண்ட் செய்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு உத்தரவிட்டுள்ளது.
காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சென்ற இந்திய அணியுடன் கிளாஸ்கோவுக்கு, இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தாவும், அணியில் இணைக்கப்படாத அதிகாரியாக மல்யுத்த நடுவரான வீரேந்தர் மாலிக்கும் சென்றிருந்தனர். இதில் காமன்வெல்த் போட்டிகளின் கடைசி நாளான நேற்று இருவரும் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். ராஜீவ் மேத்தா மீது மதுகுடித்து வாகனம் ஓட்டியதாகவும், வீரேந்தர் மாலிக் மீது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் புகார் பதிவு செய்யப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் கருத்து தெரிவிக்க மறுத்து வருகின்றனர். ஆனால் வட்டார தகவல்கள் படி வெள்ளிக்கிழமை இரவு நடந்த பார்ட்டி கொண்டாட்டம் ஒன்று தொடர்பாக ராஜீவ் மேத்தா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்திய ஜிம்னாஸ்டிக் வரலாற்றிலேயே முதல்முறையாக தீபா கார்மகார் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இதையொட்டி இந்திய ஜிம்னாசியம் கூட்டமைப்பு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் கலந்துகொள்ள ராஜீவ்மேத்தா மற்றும் அவரது குடும்பத்தார் சென்றிருந்தனர். அதில் குடும்பத்தார் முதலிலேயே கிளம்பிவிட, ராஜீவ்மேத்தா தாமதமாக பார்ட்டியை முடித்துவிட்டு கிளம்பியுள்ளார். அப்போதுதான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிவந்ததற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
வீரேந்தர் மாலிக் மேற்கு கிளாஸ்கோ பகுதியிலுள்ள ஹோட்டலில் பெண்ணிடம் தவறாக நடக்க முற்பட்டு அதனால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதுகுறித்து மேலதிக விவரங்களை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் வெளியிட மறுத்துவருகிறார்கள்.
இதனிடையே இந்திய மல்யுத்த கூட்டமைப்பு, வீரேந்தர் மாலிக்கை சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. அவர் மீதான குற்றச்சாட்டில் இருந்து மீளும்வரை சஸ்பெண்ட் தொடரும் என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதான இரு இந்தியர்களுக்கும் தேவையான சட்ட உதவிகளை அந்தநாட்டுக்கான இந்திய தூதரக அதிகாரிகள் செய்து கொடுத்து வருகிறார்கள்.