தசாவதாரம்.. மதநல்லிணக்கம்.. தெப்பல் உற்சவம்.. கலிபோர்னியாவில் அட்டகாசமான கொலு கொண்டாட்டம்
கலிபோர்னியா: நவராத்திரி விழாவையொட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மண்டெக்காவில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
புரட்டாசி மாதத்தில் அம்பாளை நோக்கி இருக்கும் விரதங்களில் ஒன்று நவராத்திரி விரதம். நமது அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்கும் சக்தியை போற்றும் விரதமே நவராத்திரி விரதமாகும்.
மொத்தம் 9 நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கைக்கும் அடுத்த 3 நாட்கள் லட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் கொண்டாடப்படுகிறது.

பொம்மை கொலு
இதையொட்டியே சரஸ்வதி பூஜை, விஜயதசமி விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரியை முன்னிட்டு ஏராளமான வீடுகளில் பொம்மைகளை கொண்டு அழகிய கொலுக்கள் வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கலிபோர்னியாவில் வாசகர் ரவி கோவிந்தராஜின் வீட்டில் பொம்மை கொலு வைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சமைத்த உணவுகள்
7 படிகளை கொண்டு வைக்கப்பட்ட இந்த கொலு தெப்பத்தை கருப்பொருளாக கொண்டுள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வீட்டிலேயே சமைக்கப்பட்ட உணவுகள் பரிமாறப்பட்டன.

தாத்தா பாட்டி
கொலுவையொட்டி பஜனைகள், கர்நாடக சங்கீத பாடல்கள் பாடப்பட்டன. இதையடுத்து மங்கள ஆரத்தியுடன் இந்த விழா இனிதே முடிவடைந்தது. முதலாவது படியில் காட்டு விலங்குகளும், வீட்டு விலங்குகளும் இடம்பெற்றுள்ளன. இதில் ஒரு தாத்தா, பாட்டி இருப்பது போன்று காட்சிகள் உள்ளன.

சரஸ்வதி
2-ஆவது வரிசையில் ஒரு பகுதி திருமணம் நடப்பது போன்றும் மறுபகுதியில் இசை கருவிகள் வாசிப்பது போன்றும் உள்ளது. 3ஆவது வரிசையில் இரு புறமும் யானைகள் புடைச்சூழ சரஸ்வதி தேவி 8 உருவங்களில் இருப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

ராதே கிருஷ்ணா
4-ஆவது வரிசையில் கைலாய மலையில் சிவனும் சக்தியும் இருக்கும் காட்சிகள் உள்ளன. 5ஆவது வரிசையில் லட்சுமி, சரஸ்வதி, மீரா உள்ளிட்ட தெய்வங்கள் உள்ளனர். 6ஆவது வரிசையில் ராதே கிருஷ்ணா, பெருமாள்- அலமேலு, முருகன் ஆகிய தெய்வங்கள் வைக்கப்பட்டுள்ளன.

10 அவதாரங்கள்
7-ஆவது படியான மிக முக்கிய படியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமண, பரசுராம, பலராம, ராம, கிருஷ்ண, கல்கி ஆகியவை விஷ்ணுவின் 10 அவதாரங்கள் ஆகும். உலகில் அதர்மம் தலையெடுக்கும் போது விஷ்ணு உலகில் அவதரித்து காப்பார் என்பது ஐதீகம்.

மதநல்லிணக்கம்
தெப்பகுளம் வைக்கப்பட்டு அதை சுற்றி கோயில் கோபுரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் கோயிலுக்கு அருகில் மசூதியும் தேவாலயமும் அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி: ராஜி கோவிந்தராஜன்












Click it and Unblock the Notifications