"கூகுள் வேலை வேண்டாம்".. ரூ.3.4 கோடி சம்பளத்தை உதறி வெளியேறிய பெண் மேனேஜர்! அந்த காரணம் தான் ஹைலைட்
சூரிச்: ஐடி நிறுவனத்தில் தொடர்ந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் கூகுள் நிறுவனத்தில் ரூ.3.40 கோடி சம்பளத்தில் பணியாற்றி வந்த சீனியர் புரோகிராம் மேனேஜர் தனது பணியை திடீரென்று ராஜினாமா செய்து வெளியேறி உள்ளார். அதற்காக அவர் கூறிய காரணம் அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளது.
கூகுள் நிறுவனத்தில் சீனியர் புரோகிராம் மேனேஜராக பணியாற்றி வந்தவர் ஃப்ளோரன்ஸ் போய்ரல். இவருக்கு வயது 37. இவர் முதலில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியை தொடங்கினர்.

அதன்பிறகு சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிச் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவருக்கு ஆண்டுக்கு 3 லட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டாலர் சம்பளமாக வழங்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.3.40 கோடியாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் ஃப்ளோரன்ஸ் போய்ரல் திடீரென்று தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது பல ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இப்படியான சூழலில் அவரது ராஜினாமா அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இதுபற்றி ஃப்ளோரன்ஸ் போய்ரல் தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறியுள்ளாதாவது:
பணி ராஜினாமா
‛‛நான் கூகுள் நிறுவனத்தின் சூரிச் அலுவலகத்தில் சீனியர் புரோகிராம் மேனேஜராக பணி புரிந்து வந்தேன். ஆண்டுக்கு ரூ.3.4 கோடி சம்பளமாக வந்தது. ஆனால் நான் பணியை ராஜினாமா செய்துவிட்டேன். இந்த வருமானத்தை கைவிடுவது கடினமானதாக இருக்கலாம். ஆனால் எனக்கு பணியை விட வேண்டும் என்று தோன்றியது.
என்ன காரணம்?
இதற்கு முக்கிய காரணம் உள்ளது. நான் பணியாற்றியபோது அந்த வேலை எனக்கு சோர்வை தரவில்லை. மகிழ்ச்சியாகவே பணி செய்து வந்தேன்.
ஆனால் என்னை நேசிக்கும் நபர்களுடன் என்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை. அவர்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஏனென்றால், வாழ்க்கை மிகவும் குறுகியது. அதேவேளையில் அழகானது.
வேலை வேலை என வேண்டாம்
இதனால் உண்மையிலேயே மகிழ்ச்சியை தரும் நபர்களுடன் நேரம் செலவிட்டு அவர்களுடனான அனுபவத்தை பெற நினைத்தேன். அதேபோல் வாழ்க்கையின் பெரும் பகுதியை வேலை வேலை என்று அலுவலகத்திலேயே செலவிட விரும்பவில்லை.
இதனால் பணியை ராஜினாமா செய்தேன். இப்போது பணியை விட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போதும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். கூகுள் பணியை விட்டு வெளியேற அவர் கூறியுள்ள காரணம் அனைவரின் புருவத்தையும் உயர்த்தி உள்ளது.
‛பாய் ப்ரண்ட்டுடன் ஜாலி’
முன்னதாக அவர் 2024ம் ஆண்டிலேயே ரூ.12.5 கோடி வரை சேமித்து வைத்து கொண்டார். தனது எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு அவர் இந்த பணத்தை முறையான திட்டமிடலுடன் சேமித்தார். இப்போது அவர் தன்னுடன் கூகுளில் வேலை செய்த வந்த 17 வயது மூத்த ஜான் என்ற ‛பாய் ப்ரண்ட்’ உடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
ஜானும் கூகுள் பணியை உதறி தள்ளியவர் தான். பணி ஓய்வுக்கு பிறகு இருவரும் நேரம் செலவிடலாம். ஆனால் அது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்று இருவரும் நினைத்து ஒன்றாக பணியை கைவிட்டு மகிழ்ச்சியாக வலம் வருகின்றனர்.
மேலும் தற்போது ஃப்ளோரன்ஸ் போய்ரல் சூரிச் நகரில் பெண்களுக்கு தொழில் சார்ந்த பயிற்சியை வழங்கி வருவதோடு, நீச்சலடித்து மகிழ்வது உள்பட பல பொழுதுபோக்குகளில் நண்பர்களுடன் நேரம் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications