மேத்யூ புயல் சிதைத்த ஹைதியில் தலை விரித்தாடும் காலரா... பீதியில் மக்கள்!
போர்ட் ஆப் பிரின்ஸ்: மேத்யூ புயலால் பெரும் உயிரிழப்பு மற்றும் சேதத்தைச் சந்தித்த ஹைதி நாட்டில் தற்போது காலரா நோய் வேகமாகப் பரவி வருகிறது.
கரீபியன் கடலில் உருவான 'மேத்யூ' புயல் பகாமாஸ் நாடு வழியாக இந்த மாத தொடக்கத்தில் அட்லாண்டிக் கடலுக்குள் புகுந்து கடந்தது. இதனால் ஹைதி, அமெரிக்கா, கியூபா, பகாமாஸ் உள்ளிட்ட நாடுகளில் கடுமையான புயல் காற்றுடன் மழை கொட்டியது.
குறிப்பாக இப்புயல் தாக்குதலில் அமெரிக்காவும், ஹைதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மற்றும் பலத்த மழை காரணமாக 336 பேர் உயிரிழந்ததாக ஹைதி நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்த போதும், பலியானவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியதாகக் கூறப்படுகிறது.
மேத்யூ புயலின் கோரத்தாண்டவத்தால் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், ஹைதியின் பல்வேறு பகுதிகளில் வாந்தி, பேதி மற்றும் காலரா நோய் வேகமாகப் பரவி வருவது மக்களிடையே மேலும் பீதியை அதிகரித்துள்ளது.
மேத்யூ புயலுக்கு பின்னர் இதுவரை 800 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மட்டும் 773 பேர் காலரா பாதிப்பு ஏற்பட்டு பதிவு செய்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஹைதி பிரதிநிதி ஜீன் லக் பொன்செலெட் தெரிவித்துள்ளார்.
நோய் பாதிப்புக்கு உள்ளான ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காலராவைக் கட்டுப்படுத்த அண்டை நாடுகளின் உதவியுடன் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக 10 லட்சம் காலரா தடுப்பு மருந்துகளை கரீபியன் நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.