சப்ரைஸ் அட்டாக்-சீர்குலைந்த இஸ்ரேல்! இது முதல்முறை இல்லை! 50 ஆண்டுக்கு முன் இதே நாளில் நடந்த சம்பவம்
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படைகள் நேற்று நடத்திய தாக்குதலை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல ஒரு சம்பவம் இதே இஸ்ரேலில் நடந்துள்ளது உங்களுக்குத் தெரியுமா. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நேற்றைய தினம் காலைப் பொழுதை இஸ்ரேல் குண்டுகள் மழையுடன்தான் தொடங்கியது. இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல்களைப் பாலஸ்தீன ஹமாஸ் படைகள் நடத்தின. இதில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பலர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை இல்லை. வரலாற்றை நாம் எடுத்துப் பார்க்கும் போது பல நேரங்களில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும், நேற்று நடந்த தாக்குதல் முக்கியமானது. ஏனென்றால் இந்த தாக்குதலை ஹமாஸ் படையினர் யோம் கிப்பூர் நாளன்று நடத்தியுள்ளனர். யோம் கிப்பூர் என்பது யூத மதத்தில் மிகவும் புனிதமான நாளாகும்.

யோம் கிப்பூர் போர்: இந்த யோம் கிப்பூர் தினத்தன்று யூதர்கள் விரதம் இருந்து இறைவழிபாடு செய்வார்கள். சரியாக இந்த நாளை குறிவைத்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். யூத மதத்தில் முக்கியமான நாள் என்பதால் இஸ்ரேல் நாட்டில் இதற்கு அரசு விடுமுறையும் விடப்பட்டிருந்தது. சரியாக இந்த நேரம் பார்த்து இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்காத வகையில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், போர் அடுத்த கட்டத்திற்குச் சென்றுள்ளது.
அதேநேரம் வரலாற்று ரீதியாகவும் இஸ்ரேலுக்கு இந்த யோம் கிப்பூர் நாள் முக்கியமானது. ஏனென்றால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே அக். 6ஆம் தேதி யோம் கிப்பூர் நாளன்று தான் அப்போதும் இஸ்ரேல் மீது அரபு நாடுகள் இணைந்து போரை ஆரம்பித்தன. அன்றும் இதேபோல தான் நடந்தது. அதிகாலை நேரத்தில் அரபு நாடுகள் இணைந்து முழு வீச்சில் இஸ்ரேல் நாட்டிற்கு எதிராகத் தாக்குதலை ஆரம்பித்தது. அன்று அந்த நாளில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
50 ஆண்டுகளுக்கு முன்பு: 1973 அக். 6ஆம் தேதி தொடங்கிய இந்த யோம் கிப்பூர் போரை ரமலான் போர் என்றும் அழைப்பார்கள். 1973இல் இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் ரமலான் மாதமும் இதே காலகட்டத்தில் வந்தது. இதன் காரணமாகவே அதை ரமலான் போர் என்றும் அழைத்தார்கள். அன்றைய தினம் நடந்த தாக்குதலை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கூட அப்போதே பல ஆண்டுகளாகவே மோதல் போக்கே அங்கு நிலவி வந்தது.
1948இல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது முதலே அருகே இருக்கும் அரபு நாடுகளுக்கு அதன் மீது கோபம்.. இருப்பினும், இஸ்ரேல் நாட்டிற்கு மேற்குலக நாடுகள் ஆதரவு இருந்ததால் அரபு நாடுகளால் எதுவும் செய்ய முடியவில்லை. குறிப்பாக 1949, 1956 மற்றும் 1967 என 3 முறை நடந்த போர்களிலும் அரபு நாடுகள் தோல்வியையே சந்தித்தன. இந்த மூன்று போர்களிலும் இஸ்ரேல் நாடு குறிப்பிடத்தக்க அளவுக்குத் தனது எல்லையை விரிவுபடுத்தியது. இது அரபு நாடுகளைக் கோபமடையச் செய்தது.
என்ன காரணம்: கடந்த காலங்களில் போரில் அடைந்த தோல்விக்குப் பழி தீர்க்கும் வகையில் 1973இல் சக நாடுகளைத் துணைக்கு அழைத்துக் கொண்டு எகிப்து இந்த ஆரம்பித்தது. 1973 அக். 6ஆம் தேதி எகிப்து மற்றும் சிரியப் படைகள் இணைந்து இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. அவர்களுக்கு வேறு சில நாடுகளும் ஆதரவு கொடுத்தன. இந்த போர் சுமார் மூன்று வாரங்களுக்கு நீட்டித்தது. போர் மிக மிகக் கொடூரமானதாக இருந்தது. இரு தரப்பில் இருந்தும் இதில் பல ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டனர்.
முடிவு என்ன: இதில் சோவியத் ஒன்றியம் அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா இஸ்ரேலுக்கும் ஆயுதங்களை சப்ளை செய்தது. முதலில் சில நாட்கள் திணறினாலும் கூட, பின்னர் சுதாரித்துக் கொண்ட இஸ்ரேல் திருப்பி அடிக்க தொடங்கியது. எகிப்து மற்றும் சிரியா நாடுகளில் ஊடுருவித் தாக்க ஆரம்பித்தது. இதனால் போரிஸ் இஸ்ரேல் கை ஓங்க ஆரம்பித்தது. இருப்பினும், சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்த நிலையில், இறுதியில் அக்.26ஆம் தேதி போர் நிறுத்தப்பட்டது.
இருப்பினும், அப்போது போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தாகவில்லை. அதற்குப் பல மாதங்கள் ஆனது. 1974 நவம்பர் 11ஆம் தேதி எகிப்து நாட்டுடனும் 1974 மே 31ஆம் தேதி சிரியா உடனும் இஸ்ரேல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இப்போது சரியாக 50 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மீண்டும் கிட்டதட்ட அதே காட்சிகள் இஸ்ரேலில் நடக்கிறது. ஹமாஸ் படை இதே நாளில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் முடிவை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications