சொந்த மக்களையே கொல்லும் நெதன்யாகு? இஸ்ரேல் பணயக்கைதிகள் சொன்ன ஷாக் தகவல்.. பரவும் வீடியோ
காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், ஹமாஸிடம் பணயக்கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்கள் தங்களை மீட்கத் தவறியதாக பிரதமர் நெதன்யாகுவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
பாலஸ்தீனத்தில் அகதிகளாக குடியேறிய யூதர்கள், பிரிட்டன் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்க தொடங்கினர். பாலஸ்தீனத்திற்குள் உருவான இஸ்ரேல் மெல்ல மெல்ல வளர்ந்து முழு பாலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்தது. இதற்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் குரல் கொடுக்க, பாலஸ்தீன விடுதலை அமைப்புகள் உருவாக தொடங்கின. இதில் ஒன்றுதான் ஹமாஸ். கடந்த 2005ம் ஆண்டு காசா முனை பகுதியை ஆக்கிரமித்திருந்த இஸ்ரேல் அங்கிருந்து விலகிக்கொண்டனது. இதனையடுத்து காசாவில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியது.

அப்போதிலிருந்து இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு தீவிரமடைந்தது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி யாரும் எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதலை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக பாராகிளைடர் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சுமார் 230 பேர் வரை பணயக்கைதிகளாக ஹமாஸ் படையினர் சிறை பிடித்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நாடு, உலகில் மிகவும் திறன் வாய்ந்த உளவு அமைப்பான மொசாட்-ஐ கொண்டிருக்கும் நாடு என்று பெயரெடுத்த இஸ்ரேலுக்கு ஏன் இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரியவில்லை? என்று கேள்வியெழுந்தது.
மட்டுமல்லாது இந்த தாக்குதல் சம்பவம் இஸ்ரேலின் இமேஜை கடுமையாக பாதித்தது. எனவே 7ம் தேதி தொடங்கி 24வது நாளாக இன்று வரை காசா மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை கடுமையான தாக்குதலை தொடுத்து வருகிறது. என்னதான் இஸ்ரேல் பதில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தாலும், தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை ஏன் நெதன்யாகு தலைமையிலான பாதுகாப்பு படை தடுக்க தவறியது என இஸ்ரேல் மக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த நெதன்யாகு, போர் குறித்த தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்.
போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதால் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அரபு நாடுகளும், பாலஸ்தீன ஆதரவு நாடுகளும் தீவிரமாக முயன்று வருகின்றன. கத்தார் போர் நிறுத்தம் குறித்து இரு நாடுகளுக்கும் மத்திஸ்தம் செய்து வருகிறது. இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தால், நாங்கள் பிடித்து வந்த கைதிகளையும் விடுவித்துவிடுகிறோம் என இந்த பேச்சுவார்த்தையில் சமாதானத்திற்கு முன் வந்திருக்கிறது ஹமாஸ். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸின் வாக்குறுதி உளவியல் பயங்கரவாதம் என்று கூறியுள்ளார். மறுபுறம் "நம்மிடம் உள்ள கைதிகளை விடுவித்து எங்கள் சொந்தங்களை மீட்டு தாருங்கள்" என இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
நிலைமை இப்படி இருக்கையில் போர் இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது. "அதாவது, இத்தனை நாட்களாக வான்வழி தாக்குதலில் ஈடுபட்டிருந்த நமது படைகள் தற்போது தரைவழி தாக்குதலில் தீவிரமாக இறங்கியுள்ளன. இது போரின் இரண்டாவது கட்டம். ஹமாஸ் அரசு மற்றும் அதன் படைகளை முற்றிலுமாக அழித்து இஸ்ரேல் ராணுவம் நமது மக்களை மீட்டு வருவார்கள்" என நெதன்யாகு கூறியுள்ளார். இவர் கூறியதை போல காசாவுக்குள் பீரங்கிகளுடன் இஸ்ரேல் படைகள் நுழைந்து முன்னேறி வருகின்றன.
israel captive sent message to israel government to free all prisoners from hamas pic.twitter.com/pz8TgZ9YWn
— Halley Karthik (@HalleyKarthik) October 30, 2023
இந்நிலையில் தங்கள் வசம் இருக்கும் இஸ்ரேலிய பணயக்கைதிகள் பேசிய வீடியோ ஒன்றை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. அதில், தங்களை மீட்க பிரதமர் நெதன்யாகு தவறிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் அதில் பணயக்கைதிகளாக இருக்கும் பெண்கள் பேசியதாவது, "நெதன்யாகு வணக்கம். நாங்கள் கடந்த 23 நாட்களாக ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறோம். இந்நேரம் போர் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் எங்களை விடுவித்திருக்க வேண்டும். நீங்கள் அப்படி செய்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை.
கடந்த 7ம் தேதி முதல் உங்களது தோல்வியின் காரணமாக உங்கள் அரசியல், பாதுகாப்பு மற்றும் இராணுவத் தோல்வி காரணமாக நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம். சம்பவம் நடந்தபோது யாரும் அங்கு இல்லை. எங்களை காப்பாற்ற ஒரேயொரு சிப்பாய் கூட அங்கு இல்லை. எனவே உங்களுக்கு வரி கட்டும் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம். இப்போது சிறைபிடிக்கப்பட்டிருக்கிறோம். தற்போது எங்கள் இருப்பிடங்கள் மீது தொடர்ச்சியாக நீங்கள் குண்டுகளை வீசிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எங்கள் அனைவரையும் கொல்ல விரும்புகிறீர்களா? நீங்கள் அவர்களையெல்லாம் கொன்று குவித்தது போதாதா? கொல்லப்பட்ட இஸ்ரேலிய பொதுமக்கள் மட்டும் போதாதா? இப்போது எங்களை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். பாலஸ்தீனர்களை விடுவித்து எங்களை காப்பாற்றுங்கள். எங்களுக்கான குடும்பம் அங்கே காத்திருக்கிறது" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications