கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்
நியூயார்க்: கேட்பதற்கே நெஞ்சை உறைய வைக்கிறது இந்த சோகக் கதை. அந்த பரந்து விரிந்த சஹாரா பாலைவனத்தின் சுட்டெரிக்கும் வெயிலில், துளி தண்ணீருக்குக் கூட வழியில்லாமல் 49 மனித உயிர்கள் துடிதுடித்துப் பரிதாபமாகத் தங்களின் மூச்சை நிறுத்தியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் சஹாரா பாலைவனப் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த நெஞ்சை உலுக்கும் கொடூரத் துயரம், ஒட்டுமொத்த உலகையுமே உறைந்து போகச் செய்திருக்கிறது.
மாலி நாட்டில் நடைபெற்ற ஒரு இஸ்லாமியப் பெருநாள் மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, மகிழ்ச்சியோடு தங்களின் சொந்த தாயகம் நோக்கி லாரி ஒன்றில் பயணிகள் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அகாடெஸ் ஆளுநர் அலுவலகம்
அகாடெஸ் ஆளுநர் அலுவலகம் கொடுத்துள்ள தகவலின்படி, இவர்கள் அனைவரும் மாலியிலிருந்து தாயகம் திரும்பிய பயணிகள் என்பது உறுதியாகியுள்ளது.
லாரியில் பயணித்தவர்கள் நைஜர் மற்றும் அல்ஜீரியா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள அசமாக்காவுக்கு மேற்கே 80 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்தப் பெருந்துயரம் நிகழ்ந்தது. அந்த வெறிச்சோடிய பாலைவன மணலுக்குள் லாரி திடீரெனப் பழுதடைந்து நடுவழியில் சிக்கிக்கொண்டது.
ரிப்பேர் ஆன லாரி
டிரைவரும் பயணிகளும் எவ்வளவு போராடியும் அந்த பழுதை சீரமைக்க முடியவில்லை. வாகனத்தைச் சீரமைக்க முடியாத அவலம் ஒருபுறம், சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறிச்சோடிக்கிடக்கும் பாலைவனம் மறுபுறம் என அவர்கள் வசமாக மாட்டிக்கொண்டனர்.
நாட்கள் நகர நகர, அவர்கள் கையில் வைத்திருந்த அத்தியாவசிய உணவும், குடிநீர் கையிருப்பும் முழுமையாகத் தீர்ந்துபோயிருக்கிறது. கொடூரமான வெப்பம் ஒருபுறம் வாட்ட, துளி நீரின்றி தவித்த அந்தப் பயணிகள் மாற்று உதவியும் கிடைக்காமல் அங்கே தவித்துள்ளனர். கத்தரி வெயிலின் தாகத்தாலும், கடும் வெப்பத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் சக்தியை இழந்து, 49 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சஹாரா பாலைவனம்
ஆனால், இந்த மரணப் போராட்டத்திலும் ஒரு மனிதாபிமான அதிசயமும், நெஞ்சை நெகிழ வைக்கும் துணிச்சலும் அரங்கேறியுள்ளது. ஆம், இந்தக் குழுவில் இருந்த இரண்டு பயணிகள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
தங்களின் தாகத்தையும், கொளுத்தும் வெயிலையும் தாங்கிக்கொண்டு, எப்படியாவது தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்ற வெறியோடு சஹாராவின் பாலைவன மணலில் சுமார் 50 கிலோ மீட்டருக்கும் மேல் அவர்கள் நடந்து சென்றுள்ளனர்.
தண்ணீர் இல்லாமல் தாகத்தில் போன உயிர்கள்
இறுதியில் ஒரு நீர்நிலையைக் கண்டுபிடித்துத் தங்களின் உயிரைக் காத்துக்கொண்டதோடு, எப்படியோ அசமாக்கா பகுதியை அடைந்து அங்கிருந்த அதிகாரிகளுக்கு இந்த துயரச் செய்தியைக் கொண்டு சேர்த்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரிலேயே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைப்பதாக இருந்தது. வெறிச்சோடிய அந்தப் பாலைவனப் பகுதியில் உயிரிழந்து கிடந்த 49 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, நைஜர் நிர்வாகத்தின் சார்பில் அங்கேயே ஒரே பொதுக் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஒரே புதைகுழியில் 49 உயிர்கள்
ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கும் புலம்பெயர்ந்தோரின் மிக முக்கியமான மரவழித்தடமாக இந்தச் சஹாரா பாலைவனப் பகுதி கருதப்படுகிறது.
கடுமையான வெப்பம், மனித நடமாட்டமில்லாத சூழல், நீர் பற்றாக்குறை மற்றும் மனிதாபிமான நெருக்கடி காரணமாக ஆண்டுதோறும் எண்ணற்ற உயிர்கள் இப்பகுதியில் பலியாகி வருகின்றன. தாகத்தோடவே தண்ணிக்கு வழியில்லாமல் 49 பேர் பலியான இந்தச் சம்பவம், புலம்பெயர்ந்தோரின் இந்தப் பயண வழித்தடத்தின் கொடூரப் பின்னணியைச் சர்வதேச அளவில் இபபோது வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. சொந்த ஊருக்குச் செல்ல நினைத்த பயணிகளுக்குப் பாலைவனமே கல்லறையானதுதான் உச்சக்கட்ட சோகம்....!!!












Click it and Unblock the Notifications