ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா?
தெஹ்ரான்: பொதுவாக வரலாற்றி திரும்பி பார்த்தால், போரில் சிக்கும் நாடுகள் பொருளாதார ரீதியாக சிதைந்து போயிருக்கின்றன. ஆனால் அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய போரால், பாதிப்புகளை ஈரான் சந்தித்தாலும் ஈரானின் எண்ணெய் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் ஒரே முக்கிய ஏற்றுமதியாளராக ஈரான் இருப்பதால், அதன் வருமானம் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஈரான் தினமும் எண்ணெய் ஏற்றுமதி மூலமாக மட்டும் 1310 கோடி வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் எடுத்த முடிவு ஈரானுக்கு சாதமாகவும், இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்பட பல்வேறு ஆசிய நாடுகளுக்கு பாதகமாகவும் முடிந்துள்ளது. ஆசிய நாடுகளுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குமே பாதகமாக மாறி உள்ளது. ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் எண்ணெய் ஏற்றுமதி முற்றிலும் வளைகுடா நாடுகளில் முடங்கி உள்ளது.

ஈரான் அனுமதி
அதேநேரம் அமெரிக்காவின் நட்பு நாடுகளை தவிர, இந்தியா உள்ளிட்ட ஒரு சில நாடுகளைத்தான் எண்ணெய் கொண்டு செல்ல ஈரான் அனுமதிக்கிறது. அதுவும் சில நாட்களாகத்தான் அனுமதிக்கிறது. ஆனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இந்தியாவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி ஈரான் நன்றாக சம்பாதிக்கிறது.
பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு $115 மில்லியனாக இருந்த ஈரானின் எண்ணெய் வருமானம், மார்ச் மாதத்தில் ஒரு நாளைக்கு $139 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது. இந்திய மதிப்பில் 1310 கோடி தினமும் ஈரான் எண்ணெய் விற்று சம்பாதித்து வருகிறது. தற்போதைய நிலையில் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் $100-ஐத் தாண்டியுள்ளது. ஈரான் தனது எண்ணெயை சீனா போன்ற நட்புநாடுகளுக்கு மிகக் குறைந்த தள்ளுபடியில் (பேரலுக்கு $2.10 மட்டுமே தள்ளுபடி) விற்பனை செய்கிறது.
தடையற்ற ஏற்றுமதி
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்தாலும், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஈரானின் முக்கிய ஏற்றுமதி மையமான கார்க் தீவு மீது அமெரிக்கா இராணுவத் தாக்குதல்களை மட்டுமே நடத்தியது, ஆனால் அதன் எண்ணெய் உள்கட்டமைப்பைத் தாக்கவில்லை.
தற்காலிகத் தடை நீக்கம்
எண்ணெய் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த, கடலில் உள்ள டேங்கர்களில் இருக்கும் ஈரானிய எண்ணெய்க்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதை நிபுணர்கள் "ஈரானிடம் எண்ணெய் விற்கச் சொல்லி அமெரிக்கா கெஞ்சுவது போல் உள்ளது" என்று விமர்சித்து வருகிறார்கள்.
ஈரானின் சாதகமான சூழல்
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்சனை காரணமாக ஈராக், குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகள் போர் காரணமாக உற்பத்தியைக் குறைத்துள்ளன. அதேபோல் எண்ணெய்யை அனுப்ப மாற்று வழிகளைத் தேடுகின்றன. ஆனால் ஈரான் தடையின்றி இந்த ஜலசந்தி வழியாகத் தனது கப்பல்களை அனுப்பி வருகிறது. அதேபோல் ஹார்முஸ் ஜலசந்திக்கு வெளியேயும் ஈரான் தனது எண்ணெயை ஏற்றி அனுப்புகிறது.
சுங்கக் கட்டணம்
அதேபோல் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் வணிகக் கப்பல்களுக்கு ஒரு பயணத்திற்கு $2 மில்லியன் வரை போக்குவரத்து கட்டணமாக வசூலிப்பதன் மூலம் ஈரான் கூடுதல் வருமானம் ஈட்டுகிறது. இந்த வருமானம், போரினால் சேதமடைந்த தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவும், ஆயுதங்களை மீண்டும் நிரப்பவும் ஈரானுக்கு உதவும்.
அரசியல் சூழல் என்ன
அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவில்லை என்றால் அதன் எரிசக்தி மையங்களைத் தாக்குவேன் என்று முதலில் எச்சரித்தார். பின்னர், ஈரானுடன் "நல்ல பேச்சுவார்த்தை" நடப்பதாகக் கூறி தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இருப்பினும், ஈரான் இந்தப் பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதுடன், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகள் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications