ஹவுதி தீவிரவாதிகள் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. 75 ஏமன் வீரர்கள் பலி.. மசூதி தரைமட்டம்
சனா, ஏமன்: ஏமன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 75 ஏமன் நாட்டு ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
மாரிப் என்ற மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. மசூதி அருகே உள்ள வளாகத்தில் இந்த ராணுவ முகாம் உள்ளது. ஹவுதி புரட்சிக்காரர்களுக்கு எதிரான தாக்குதலை ஏமன் ராணுவத்தினர் அதிகரித்திருந்த நிலையில் ராணுவத்தினர் குறி வைத்து தாக்கப்பட்டுள்ளனர்.
தலைநகர் சனாவிலிருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் மாரிப் உள்ளது. ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி புரட்சிக்காரர்கள் ஈரான் ஆதரவுடன் ஏமன் ராணுவத்தினரை எதிர்த்து போராடி வருகின்றனர். அவர்கள் மீதான தாக்குதலை சமீப நாட்களாக அதிகரித்துள்ளது ஏமன் ராணுவம். இரு தரப்புக்கும் இடையே பல இடங்களில் அதிரடி மோதல்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில் ஏமன் அரசைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளை ஹவுதி புரட்சியாளர்கள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கு ஈரான் முழு ஆதரவைக் கொடுத்து வருகிறது. மறுபக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் இருந்து வரும் ஏமன் அரசுக்கு சவூதி மற்றும் அதன் நட்பு நாடுகள் ஆதரவாக உள்ளன. இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்துள்ளது.
சி.ஏ.ஏ.வுக்கு எதிர்ப்பு: ராஞ்சியில் அலை அலையாய் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பெண்கள்
இந்த நிலையில்தான் ராணுவ முகாமை குறி வைத்து ஹவுதி புரட்சியாளர்கள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். சரமாரியாக நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 75 படையினர் கொல்லப்பட்டதோடு 100க்கும் மேற்பட்டோர் காயடைந்தனர். அந்த முகாமே சீர்குலைந்து போய் விட்டது. மசூதியும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்புதான் வடக்கு சனாவில் உள்ள நஹம் என்ற பகுதியில் ஹவுதி புரட்சிக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏமன் அரசு முடுக்கி விட்டிருந்தது. இந்த நிலையில்தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஏமன் அதிபர் அபெத்ரபூ மன்சூர் ஹாடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது கோழைத்தனமானது, தீவிரவாத செயல். ஹவுதி தீவிரவாதிகள் அமைதியை விரும்பவில்லை என்பதையே இது நிரூபிக்கிறது. அவர்களுக்கு அழிவு, மரணம், கொலையைத் தவிர வேறு எதுவுமே தெரியாது. ஈரானின் தூண்டுதலால் ஏமனின் அமைதியைக் குலைக்கவே அவர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.