"ஒரே அலறல்.." முட்டையை எடுக்க சென்ற முதியவர்.. அப்படியே பாய்ந்த 40 முதலைகள்! நொடிகளில் பறிபோன உயிர்
கம்போடியா: முட்டைகளைச் சேகரிக்கச் சென்ற ஒருவரை முதலைகள் ஒன்றாக இணைந்து கடித்துக் குதறிய கொடூர சம்பவம் கம்போடியாவில் நடந்துள்ளது.
உலகின் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக முதலைகள் கருதப்படுகிறது. நிலத்தில் என்ன தான் முதலை சற்று வீக்காக இருப்பது போலத் தெரிந்தாலும், நீரில் இறங்கினால் அதன் வேகத்திற்கு நம்மால் ஈடு கொடுக்க முடியாது.
கரையோரங்களில் நீர் குடிக்க வரும் விலங்குகளை, பதுங்கி இருக்கும் முதலைகள் மின்னல் வேகத்தில் தாக்கிக் கொன்று விடும். இது தொடர்பான பல வீடியோக்களை நாம் பார்த்திருப்போம்.

முதலை:
ஆனால், அதையெல்லாம் விட மிக மோசமான ஒரு சம்பவம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள கம்போடியாவில் நடந்துள்ளது. இந்த செய்தி படிக்கும் நமக்கே இது அச்சத்தைக் கிளப்புவதாகவே இருக்கிறது. கம்போடிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை, சுமார் 40 முதலைகள் கடித்துக் குதறிக் கொன்றுள்ளது. உலகின் தற்போது வாழும் பழமையான விலங்குகளில் ஒன்றாகக் கருதப்படும் முதலைகளின் இந்த கொடூர தாக்குதல் இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
72 வயதான அந்த நபர், தனக்குச் சொந்தமான இடத்தில் முதலைகள் பண்ணையை வைத்து பராமித்து வந்துள்ளார். அப்போது அங்கே அவரது பண்ணையில் இருந்த முதலை ஒன்று முட்டைகளைப் போட்டுள்ளது. தாய் முதலையே கூண்டில் இருந்து வெளியே இழுத்து முட்டைகளைச் சேகரிக்க அவர் முயன்றுள்ளார். இதற்காக அவர் அங்கே இருந்த தடி ஒன்றை எடுத்து முதலையை விரட்ட முயன்றுள்ளார்.
என்ன நடந்தது:
அப்போது அந்த தடியைப் பிடித்த முதலை அவரை இழுத்துள்ளது. இதில் நிலைதடுமாறிய அவர், முதலை பண்ணையில் கீழே விழுந்துள்ளார். இது நடந்த உடனேயே அங்கிருந்த முதலைகள் அவரை சுற்றி வளைத்துவிட்டன. முதலைகள் ஒன்றாக இணைந்து அவரது உடலை அவரது உடலைத் துண்டு துண்டாகக் கிழித்துள்ளன. அவர் சில நொடிகளில் பரிதமாபாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. முட்டையைச் சேகரிக்கச் சென்ற முதியவரைக் காணவில்லை என்று அங்குள்ளவர்கள் தேடியுள்ளனர். அப்போது முதலை பண்ணைக்கு நடுவே அவரது உடல் பாகங்கள் இருந்ததைக் கண்டவர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். இதையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்து வந்த போலீசார் அவரது உடலின் பாகங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் கூறுகையில், "முட்டையிடும் கூண்டிலிருந்து முதலையை விரட்டத் தடியைக் கொண்டு முதலையைத் தாக்கியுள்ளார். அப்போது அந்த முதலை தடியைப் பிடித்து இழுக்கவே, முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதையடுத்து அங்கிருந்த மற்ற முதலைகள் அவர் மீது பாய்ந்து, அவரை கடித்துக் குதறியுள்ளன. அவரது உடல் பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில், அதில் முதலைகளின் பல் தடங்கள் தெளிவாகத் தெரிகிறது. இதில் அவரது சில பாகங்களை முதலைகள் தின்றுவிட்டன" என்றும் அவர் தெரிவித்தார்.
முதல்முறை இல்லை:
அதேநேரம் இங்கு இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது முதல் முறை இல்லை. முன்னதாக இதே ஊரில் கடந்த 2019ஆம் ஆண்டுள் முதலை பண்ணைக்குச் சென்ற இரண்டு வயது சிறுமியை முதலைகள் கடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கது. இங்கே ஏகப்பட்ட முதலை பண்ணைகள் உள்ளன. அவை முட்டை, தோல் மற்றும் இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications