Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சக்தி வாய்ந்த உளவு அமைப்பு.. ஆனாலும் ஹமாஸ் தாக்குதல் விவகாரத்தில் 'மொசாட்' கோட்டை விட்டது எப்படி?

Subscribe to Oneindia Tamil

காசா: ஹமாஸ் படையினர் நேற்று முன்தினம் திடீரென இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை தொடுத்தனர். இதை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளது. இருப்பினும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்பாக இருக்கும் இஸ்ரேலின் 'மொசாட்' தங்கள் நாடு மீதான தாக்குதலை முன்கூட்டியே கணிக்க தவறியது எப்படி? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் நடுவில் உள்ள பகுதிதான் காசா. இதை இஸ்ரேல் கைப்பற்ற முயன்று வருகிறது. ஆனால், பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு இங்கு சுயாட்சியை நடத்தி வருகிறது. இதை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியிருக்கிறது. எனவே கடந்த காலங்களில் இதற்கு எதிரான தாக்குதல்களை தீவிரமாக நடத்தியிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு மட்டுமல்லாது பாலஸ்தீனத்தில் தோன்றிய பல்வேறு ஆயுத இயக்கங்கள் மீது இஸ்ரேல், மேற்கு நாடுகளின் உதவியுடன் ஏகப்பட்ட தாக்குதல்களை தொடுத்திருக்கிறது. ஆனால் ஹமாஸை மட்டும் இன்னும் இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியவில்லை.

How did Mossad, the worlds most powerful spy agency, fail to predict an attack on Israel?

இந்த பின்னணியில்தான் நேற்று முன்தினம் காலை ஹமாஸ், பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியதால் அந்நாடு தற்போது நிலைகுலைந்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த தாக்குதலின் போது எழுந்த கரும்புகையை பயன்படுத்திக்கொண்டு ஹமாஸ் படையினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்திருக்கின்றனர். மற்றொருபுறம் இஸ்ரேலின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஜீப் மூலம் ஊடுருவியுள்ளார்கள்.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் படையின் இதற்கு முன்னர் கூட சண்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், இந்த மோதல் வரலாற்றில் நேற்று முன்தினம் நடந்த அளவுக்கு மிக வீரியமான தாக்குதலை ஹமாஸ் இதற்கு முன்னர் நடத்தியதில்லை. எனவேதான் தற்போது இந்த விவகாரம் உலக நாடுகளிடையே பேசு பொருளாகியுள்ளது. மறுபுறம் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு என்று தங்களை சொல்லிக்கொள்ளும் இஸ்ரேலின் 'மொசாட்' எப்படி ஹமாஸின் தாக்குதலை முன்கூட்டியே கணிக்க தவறியது? மொசாட் மட்டமல்ல, இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சியான 'ஷின் பெட்', இஸ்ரேல் பாதுகாப்பு படை, மொசாட்டின் வெளி உளவு அமைப்பு என ஒட்டுமொத்த பாதுகாப்பு அமைப்பே இந்த தாக்குதலை முன்கூட்டே கணிக்க தவறிவிட்டது. இது எப்படி நடந்தது என்று கேள்வியெழுந்திருக்கிறது.

இதை தெரிந்துக்கொள்ள வேண்டும் எனில், முதலில் இஸ்ரேலின் உளவு அமைப்பு எப்படி செயல்படுகிறது? என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, மற்ற மேற்கு நாடுகளை போல இஸ்ரேல் தனது உளவு அமைப்புகளுக்கு போதிய அளவு நிதி கொடுத்து வருகிறது. அதாவது ஆண்டுக்கு ரூ.24,000 கோடியை ஒதுக்குகிறது. இந்த உளவு அமைப்பில் 7,000 வீரர்கள் பணியாற்றுகிறார்கள். சுருக்கமாக சொல்வதெனில் அமெரிக்காவின் CIAக்கு அடுத்தபடியாக மொசாட் இருக்கிறது. பாலஸ்தீனிய போராளிக் குழுக்களுக்குள்ளும், லெபனான், சிரியா மற்றும் பிற நாடுகளிலிருந்து முக்கிய தகவல்களை ரகசியமாக பெற ஆட்களை மொசாட் போதுமான அளவு கொண்டிருக்கிறது.

How did Mossad, the worlds most powerful spy agency, fail to predict an attack on Israel?

கடந்த காலங்களில் இப்படி தகவல்களை பெற்று பல போராளி குழுக்களின் தலைவர்களையும் போட்டு தள்ளி இருக்கிறது. கொலை செய்ய நேரடியாக சென்று துப்பாக்கியால் சுட வேண்டும் என அவசியமில்லை. இதற்காக ட்ரோன்கள், வெடிக்கும் மொபைல்கள் என மேம்பட்ட தொழில்நுட்பத்தை இஸ்ரேல் உளவுத்துறை பயன்படுத்தியுள்ளது. கொலை செய்வது மட்டுமல்லாது அரசியல் மந்த தன்மையை உருவாக்குவதும் மொசாட் உளவு பிரிவின் ஒரு வேலையாகும். இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளில் இந்த வேலையை மொசாட் செய்து வருகிறது. இந்த நாடுகளில் உள்ள அரசியல் ஸ்திரமின்மை, குழப்பங்கள், அடிக்கடி ஆட்சி மாற்றம் போன்றவற்றிற்கு மொசாட் தீவிரமாக பணியாற்றியதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வளவு பலம் வாய்ந்த அமைப்பின் தலைவராக டாடி பார்னியா பொறுப்பு வகித்து வருகிறார்.

ஆக இப்படியாக ஏராளமான உளவு செயல்பாடுகள், எல்லையில் ஊடுருவலை தடுக்க மோசன் கேமிரா பொருத்தப்பட்ட தானியங்கி துப்பாக்கி கொண்ட அமைப்பு, ஏவுகணை தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க உருவாக்கப்பட்ட அயர்ன் டோம் அமைப்பு என எல்லாம் இருந்தும் ஹாமஸ் படையின் தாக்குதலை இஸ்ரேலால் தடுக்க முடியவில்லை. இதற்கு அரபு நாடுகளின் பாதுகாப்பு படையின் ஒத்துழைப்பும், நீண்ட தெளிவான திட்டமிடலும் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த காலங்களில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியபோது எழுந்த கோபம், பழிவாங்கும் உணர்வு எல்லாம் இந்த துல்லிய தாக்குதலதலாக உருவெடுத்திருக்கலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இது தவிர, கடந்த 1973ம் ஆண்டு நடைபெற்ற 'யோம் கிப்பூர்ப் போர்' போரின் 50வது ஆண்டை நினைவுபடுத்தும் விதமாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் 1973ம் ஆண்டுக்கு பின்னர் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுதான். இன்னும் சிலர் ஹமாஸின் இந்த தாக்குதல், அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலை விட துல்லியமானது என்றும் கூறியுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஹமாஸ் படையினர் வெறுமென ஆயுதம் ஏந்தும் போராளிகள் குழுக்கள் கிடையாது. அவர்கள் அரசியல் தெளிவு கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+