துருக்கி இதயங்களை வென்ற இந்தியா.. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் தோஸ்த்’ செயல்படுவது எப்படி?
பூகம்பத்தால் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் மருத்துவ உதவி மற்றும் மீட்பு பணியை செய்து வருகிறார்கள்.
இஸ்தான்புல்: பூகம்பத்தால் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய மீட்பு குழுவினர் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்பு பணியை செய்து வருகிறார்கள். துருக்கியில் பூகம்ப இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர், இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்ட பின் இந்திய பெண் ராணுவ அதிகாரியை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படம் பார்ப்போரை நெகிழ வைத்தது. இந்த சம்பவத்தை சொல்ல காரணம் இந்திய ராணுவம் எந்த அளவிற்கு இறங்கி துருக்கியில் வேலை செய்கிறது என்பதற்கு சிறு உதாரணம்.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு தோழமை உணர்வோடு இந்தியா பல்வேறு உதவிகளை செய்துவருகிறது.
இதுவரை, இடிபாடுகளைத் தோண்டி உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க இந்தியா உதவி செய்து வருகிறது. அத்துடன் இரண்டு நாட்களுக்கு முன்பு, இந்தியா மருத்துவப் பொருட்கள், மருத்துவர்கள் மற்றும் தேடல் மற்றும் மீட்புக் குழுக்களையும் துருக்கிக்கு அனுப்பியுள்ளது. துருக்கிக்கு மட்டுமில்லாமல், சிரியாவுக்கும் இந்திய விமானப்படையின் சி-130ஜே விமானத்தில் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

இந்தியா சூப்பர்
சிரியாவுக்கு அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டுக்கு உதவிகளை அனுப்புவது குறித்த கேள்விக்கு, "ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரு எதிர்காலம்" என்ற ஜி-20 மந்திரத்தை இந்தியா பின்பற்றுகிறது என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் 250 பேரை இந்தியா ஏற்கனவே அனுப்பி உள்ளது. இந்தியா அனுப்பிய 135 டன் எடையுள்ள சிறப்பு உபகரணங்கள் மற்றும் பிற நிவாரணப் பொருட்களும் துருக்கியை வந்தடைந்துள்ளன.

மருத்துவ உதவிகள்
NDRF இன் மூன்று தன்னார்வக் குழுக்கள், 150க்கும் மேற்பட்ட சிறப்புப் பயிற்சி பெற்ற பணியாளர்கள், ராம்போ மற்றும் அவர்களது தோழமையான நாய்ப் படை, சிறப்பு வாகனங்கள் மற்றும் பிற பொருட்களுடன் துருக்கியை அடைந்துள்ளனர். மேலும், இந்திய ராணுவத்தின் 30 படுக்கைகள் கொண்ட நடமாடும் மருத்துவமனை அமைப்பதற்கான பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் முழு செயல்பாட்டுக்காக ஆபரேஷன் தியேட்டர் மற்றும் எக்ஸ்ரே மற்றும் வென்டிலேட்டர்கள் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துருக்கி நகரங்கள்
துருக்கியின் காசியான்டெப்பில் மீட்பு நடவடிக்கைகளில் NDRF குழுக்கள் உதவி செய்து வருகின்றனர். அதே நேரத்தில் மருத்துவ குழு Iskenderun என்ற பகுதியில் நடமாடும் மருத்துவமனையை அமைக்கிறது என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கு உதவுவதற்காக, வெளிவிவகார அமைச்சகத்தின் அதிகாரிகள் குழுவொன்றும், துருக்கி மொழி பேசுபவர்கள் இருவரும் துருக்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமான உதவி
"இந்த பேரழிவை ஏற்படுத்திய பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சஞ்சய் வர்மா ஆபரேஷன் தோஸ்த்' குறித்து கூறுகையில், "ஆபரேஷன் தோஸ்த் என்பது இந்தியா முதல் ஆளாக உதவுவது, பாதுகாப்பை வழங்குவது, மனிதாபிமான உதவி செய்வது மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை விரைவாக தருவது ஆகியவை ஆகும். அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் உள்ள நாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்டக்கூடிய செயல் தான் ஆபரேஷன் தோஸ்த்" என்றார்.

வெளியுறவுத்துறை விளக்கம்
துருக்கியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது குறித்து பேசிய வெளியுறவுத்துறை (மேற்கு) செயலாளர் சஞ்சய் வர்மா " துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 12000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அதில் ஒரு இந்தியர் கூட உயிரிழந்ததாக இதுவரை தகவல் இல்லை. துருக்கியில் இந்தியர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இருப்பதாக எங்களுக்கு இதுவரை தகவல்கள் வரவில்லை. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதியில் 10 இந்தியர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது, துருக்கியில் மொத்தம் 3000 இந்தியர்கள் உள்ளனர். அதில் இஸ்தான்புல்லில் 1850 பேரும், அன்காராவில் 250 பேரும், மற்ற நகரங்களில் மீதி பேரும் உள்ளனர். துருக்கியில் வாழும் 75 இந்தியர்களிடம் இருந்து உதவி வேண்டும் என இந்திய தூதரகத்திற்கு அழைப்பு வந்தது. பெங்களூரு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் துருக்கியின் அனடோலியாவில் வணிக பயணம் சென்றுள்ளார். அவர் ஒருவரை மட்டுமே எங்களால் கடந்த இரண்டு நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை, அவரது குடும்பத்துடன் தொடர்பில் உள்ளோம். விரைவில் கண்டுபிடிப்போம்" என்றார்.

துருக்கி மக்கள் நெகிழ்ச்சி
இந்திய ராணுவம் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் துருக்கியில் பூகம்ப இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர் இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்ட பின் இந்திய பெண் ராணுவ அதிகாரியை வாரி அணைத்து கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படம் ஆகும். இந்த ஒற்றை புகைப்படமே இந்திய ராணுவம் துருக்கியர்களின் இதயத்தை வென்றுள்ளது என்பது உதாரணமாக பார்க்கப்படுகிறது. இந்திய பல துருக்கியர்களை மீட்டு அவர்களின் கண்ணீரை துடைத்து வருகிறது. நாங்கள் இருக்கிறோம் என்று உறுதுணையாக இருப்பதால் மக்களின் இந்திய ராணுவம் வென்றுள்ளது.












Click it and Unblock the Notifications