இரவோடு இரவாக இஸ்ரேல் மீது பாய்ந்த ட்ரோன்கள்! ஈரானுக்கு எதிராக திரண்ட உலக நாடுகள்- சர்வதேச பதற்றம் ஏன்
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது திடீரென ஈரான் மிகப் பெரியளவில் தாக்குதலை நடத்தியுள்ள நிலையில், இது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் முக்கிய ஈரான் தளபதி உள்ளிட்ட சுமார் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலை இஸ்ரேல் தான் நடத்தியதாகக் குற்றஞ்சாட்டிய ஈரான் அதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று கூறியது. இஸ்ரேல் தாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம் எனக் கூறவில்லை என்றாலும் ஈரான் தொடர்ந்து குற்றஞ்சாட்டியது.
தாக்குதல்: இதற்கிடையே ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவலர் படை இப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. முதற்கட்டமாகப் பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஏற்கனவே ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பல ஆண்டுகளாகப் பகை இருக்கும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. இந்தச் சம்பவத்திற்கு உலக நாடுகள் எப்படி ரியாக் செய்கிறார்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்கா: இது தொடர்பாக அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன், "இஸ்ரேலுக்கு எங்கள் பாதுகாப்பு நிச்சயம் இருக்கும்.. இஸ்ரேல் மக்களுடன் அமெரிக்கா நிற்கும்.. ஈரானின் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக அவர்களுக்குப் பக்கபலமாக இருப்போம்" என்றார். இஸ்ரேல் தனியாக இல்லை அவர்களுக்கு எப்போதும் துணையாக இருப்போம் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்தார். இது தவிர அமெரிக்க அதிபர் பைடனும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன்: இது தொடர்பாகப் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த தாக்குதல் பதட்டத்தை அதிகரித்து, பிராந்திய அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது. ஈரான் மீண்டும் தனது நடவடிக்கையால் மீண்டும் அங்கே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து எப்போதும் இஸ்ரேல் பாதுகாப்பிற்காகத் துணை நிற்போம். இஸ்ரேல் மட்டுமின்றி அங்குள்ள ஜோர்டான் மற்றும் ஈராக் உட்பட நமது அனைத்து பிராந்திய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம், பிரச்சினை மேலும் அதிகரிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுப்போம்" என்று அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் வான்வழித் தாக்குதல்களைக் கனடா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம். ஈரானின் இந்த நடவடிக்கை அங்கே குழப்பத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைக் குலைக்கிறது. இந்தத் தாக்குதல்களில் இருந்து தன்னையும் அதன் மக்களையும் பாதுகாக்க இஸ்ரேலுக்கு முழு உரிமை இருக்கிறது" என்றார்
ஜெர்மனி: ஜெர்மனியும் இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானும் அதன் பிராக்ஸிக்களும் உடனடியாக இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கு தங்கள் சப்போர்ட் இருக்கும் என்றும் ஜெர்மனி தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்திய தாக்குதலை பிரான்ஸ் நாடும் கடுமையாகக் கண்டித்துள்ளது.. இது போன்ற நடவடிக்கை அங்கே அமைதியைச் சீர்குலைப்பது மட்டுமின்றி ராணுவ பதற்றத்தையும் அதிகரிக்கிறது என்று பிரான்ஸ் சாடியுள்ளது.
உலக நாடுகள்: இது தவிர ஐரோப்பிய ஒன்றியம், ஸ்பெயின், நெதர்லாந்து, நார்வே, செக் குடியரசு, பராகுவே, மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஈரானைக் கண்டித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளன. ஈரான் இப்போது டிரோன் தாக்குதலை நடத்தி இருக்கும் நிலையில், வரும் நாட்களில் தாக்குதல் அதிகரிக்கலாம் என்றும் இதனால் அந்த பிராந்தியத்தில் அமைதி சீர்குலையும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications