பாக்.கில் பயங்கரம்... பர்மிஷன் இல்லாமல் வெளியில் சென்ற பெண் உயிரோடு எரித்துக் கொலை - கணவர் கைது
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அனுமதியின்றி வெளியே சென்ற பெண்ணை உயிரோடு எரித்துக் கவுரவக் கொலை செய்த கணவர் மற்றும் மாமனார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் முசாபர்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது சித்திக். இவரது மனைவி ஷபானா பீபி (25). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சமீபத்தில் ஷபானா பீபி தனது தங்கையை சந்திக்க கணவர் அனுமதி பெறாமல் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சித்திக், வீடு திரும்பிய ஷபானாவை அடித்து உதைத்துள்ளார்.

பின்னர் தனது தந்தையுடன் சேர்ந்து, ஷபானாவின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த ஷபானா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய முசாபர்கர் போலீசார், ஷபானாவின் கணவர் சித்திக் மற்றும் அவரது தந்தையைக் கைது செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் இது போன்ற காரணங்களுக்காக 2008-ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 ஆயிரம் பெண்கள் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு தனியார் அறக்கட்டளை ஒன்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications