மக்களைக் கொல்வதில் நான் நல்லவன், இல்லையா?... ஒபாமா கூறியதாக புதிய பரபரப்பு!
வாஷிங்டன்: பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் அமெரிக்கப் படையினர் நடத்தும் ஏவுகணைத் தாக்குதல் குறித்து தனது உதவியாளர்களிடம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியதாக கூறப்படும் ஒரு கருத்து குறித்து புதிதாக வெளியாகியுள்ள ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த நூலில், ஏவுகணைத் தாக்குதல் குறித்து தனது உதவியாளர்களிடம், மக்களைக் கொல்வதில் நான் சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறேன் என்று ஒபாமா கூறியதாக இடம் பெற்றுள்ளது. இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2009ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றவர் ஒபாமா என்பது நினைவிருக்கலாம்.

'Double Down: Game Change 2012'
2012ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஒபாமா மேற்கொண்ட பிரசாரம் குறித்த புத்தகம்தான் இது.

பத்திரிக்கையாளர்களின் புத்தகம்
லண்டனைச் சேர்ந்த மார்க் ஹால்பெரின், ஜான் ஹெய்ல்மென் ஆகிய இரு புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் இந்த நூலை எழுதியுள்ளனர். இதில் ஒபாமா குறித்த பல பரபரப்புத் தகவல்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பாகிஸ்தான், ஏமன் தீவிரவாதிகள் மீது
பாகிஸ்தான், ஏமன் நாட்டில் செயல்படும் தீவிரவாதிகள் மீது அமெரிக்கப் படையினர் நடத்தும் துரோன் எனப்படும் ஏவுகணைத் தாக்குதல் குறித்த பல முக்கியத் தகவல்களை இதில் அவர்கள் கொடுத்துள்ளனர்.

326 தாக்குதல்களுக்கு ஒப்புதல் கொடுத்த ஒபாமா
இந்த நூலில், ஒபாமா அதிபரான பின்னர் மொத்தம் 326 துரோன் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

2004 முதல் 3600 பேர் பலி
கடந்த 2004ம் ஆண்டு முதல் துரோன் தாக்குதல்களில் 2500 முதல் 3600 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 950 பேர் பொதுமக்கள் ஆவர்.

மக்களைக் கொல்வதில் நல்லவன்
துரோன் தாக்குதல்கள் குறித்து தனது நெருங்கிய உதவியாளர்களிடம் ஒபாமா, மக்களைக் கொல்வதில் நான் நல்லவனாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்று நூலில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை அமைதி
இந்த நூலில் இடம் பெற்றுள்ள கருத்து குறித்து அதிபர் மாளிகை இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ஒபாமாவின் ஆலோசகரின் விளக்கம்
அதேசமயம், ஒபாமாவின் ஆலோசகரான டேன் பீபர் கூறுகையில், எப்போதுமே தகவல் கசிவுகள் அதிபரை எரிச்சலூட்டுகின்றன. இந்த நூல் குறித்து நான் அதிபருடன் இதுவரை பேசவில்லை. அவரும் இதைப் படிக்கவில்லை. ஆனால் இப்படிப்பட்ட கசிவுச் செய்திகளை அவர் வெறுக்கிறார் என்றார்.

அமைதிப் பரிசு பெற்றவர் இப்படியா பேசுவது..
2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலக அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஒபாமா. அப்படிப்பட்டவர் இப்படியா பேசுவது என்ற சலசலப்பு தற்போது கிளம்பியுள்ளது.












Click it and Unblock the Notifications