கிம்மின் தாத்தா, அப்பாவின் மரண செய்திகளை.. நான்தான் படித்தேன்.. கண்ணீருடன் நினைவுகூறும் நியூஸ் ரீடர்
பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டால் அதை இந்த நாடு எப்படி அறியும்? அவரது உடலை என்ன செய்வார்கள் என்பது குறித்த ஊடகத் தகவல்கள் உலா வருகின்றன.
Recommended Video
கடந்த 15 நாட்களுக்கு மேலாக கிம் ஜாங் உன் பொது வெளியில் தோன்றவில்லை. அண்மையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. அரசு விழாவாக கொண்டாடப்படும் கிம்மின் தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அவர் கலந்து கொள்ளாதது மேலும் யூகங்களுக்கு எரியூட்டுகின்றன.
3ஆவது தலைமுறையாக வடகொரியாவை ஆண்டு வரும் கிம் ஜாங் உன் ஒருவேளை இறக்க நேரிட்டாலோ இல்லை அவரால் ஆட்சி, அதிகாரத்தில் அமர இயலாவிட்டாலோ வடகொரியாவுக்கு என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

துக்க செய்தி
கிம் ஜாங் உன் ஒரு வேளை இறந்துவிட்டால் அவரது இறப்பு இந்த உலகிற்கு எப்படி அறிவிக்கப்படும் தெரியுமா? கிம்மின் அப்பா இறந்து 2 நாட்கள் வரை வெளியுலகிற்கு எதுவும் தெரியவில்லை. அது போல் கிம் இறந்துவிட்டால் முதலில் அதுகுறித்து அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் அறிவிக்கப்படும். அந்நாட்டு செய்தி வாசிப்பாளர் கருப்பு நிற உடையை அணிந்து கொண்டு செய்தியை வாசித்தால் ஏதோ துக்க செய்தியை கூற போகிறார் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

துக்கமான செய்தி
வடகொரியாவின் பிரபல செய்தி வாசிப்பாளர் ரீ சன் ஹீ கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி வாசித்து வருகிறார். அவர் வடகொரியாவில் சந்தித்த சாதனைகளையும் சோதனைகளையும் உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார் அந்த பெண் செய்தி வாசிப்பாளர். மகிழ்ச்சியான செய்தி என்றால் அவரது குரலில் தெரியும். அது போல் துக்கமான செய்திக்கு அழுது கொண்டே வாசிப்பார்.

கருப்பு நிற ஆடை
வடகொரியாவில் அணு ஆயுத சோதனை அல்லது ஏவுகணை செலுத்தி அதன் வெற்றி குறித்து அவர் அறிவிக்க பிங்க் நிறத்தினாலான கொரிய நாட்டின் பாரம்பரிய உடையில் தோன்றியுள்ளார். அது போல் கிம்மின் தந்தை 2011-ஆம் ஆண்டு மறைந்தபோதும் அவரது தாத்தா 1994-ஆம் இறந்த போதும் ரீ சன் ஹீ கருப்பு நிற ஆடையை அணிந்திருந்தார்.

மக்கள் எழுச்சி
ஜனநாயக மக்கள் குடியரசு நாடாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் அந்த நாடு தோன்றிய 1948ஆம் ஆண்டு முதல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களே ஆட்சி செய்து வருகிறார்கள். ஒத்த கருத்துடைய எண்ணம் என்பதே வடகொரியாவின் தாரக மந்திரமாகும். கிம் இறந்தாலும் இங்கு எந்தவிதமான மக்கள் எழுச்சியையும் யாரும் எதிர்பார்க்க முடியாது.

குழந்தை
அது போல் வடகொரியாவின் மூத்த அரசியல்வாதிகள் பதவிக்காக அடித்து கொள்ள மாட்டார்கள். கிம் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரையே அவர்கள் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். கிம்மிற்கு 3 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதில் இரண்டாவது குழந்தை பெண் குழந்தை என்பது மட்டுமே அறியப்படுகிறது. அந்த குழந்தையும் பதவிக்கு வரும் அளவுக்கு வளர்ந்தவள் அல்ல.

பிரபலம்
கிம்மின் அப்பாவின் இன்னொரு மனைவியின் மூத்த மகன் கிம் ஜாங் நம் கடந்த 2017-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். கிம்மின் மூத்த சகோதரர் கிம் ஜாங் சோலிற்கு அரசியல் ஆர்வம் இல்லை. கிம்மின் தாத்தாவின் இன்னொரு மனைவிக்கு பிறந்த கிம் பியாங் 2 பல ஐரோப்பிய நாடுகளின் வடகொரியாவுக்கான தூதராக இருந்துள்ளார். அவர் குறித்த எந்த தகவலும் இல்லை. கிம்மின் மனைவி ரீ சோல் ஜூ அனைவருக்கும் பிரபலமானவர், 2018-இல் அதிபரின் மனைவியானார்.

பெண் தலைவர்
எனவே கிம்மிற்கு அடுத்து அவரது தங்கை கிம் யோ ஜாங் வர வாய்ப்பிருப்பதாகவே கருதப்படுகிறது. 31 வயதாகும் கிம் யோ தென் கொரிய நாட்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கிம்மின் தூதுவராக கலந்து கொண்டார். இவருக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. எனினும் அந்த நாடு பழமைவாதத்தை கடைப்பிடிக்கும் என்பதால் இதுவரை அங்கு பெண் தலைவரை அந்த நாடு சந்தித்ததே இல்லை.

நல்லடக்கம்
பியாங்கியாங்கின் புறநகர் பகுதியில் உள்ள கும்சூசன் நினைவிடத்தில் கிம்மின் தாத்தாவும் தந்தையும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு வேளை கிம் இறந்தால் பளிங்கு அரங்குகள் கொண்ட கல்லறையில் கிம்மின் உடல் அடக்கம் செய்யப்படும். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டு 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும்.












Click it and Unblock the Notifications