ஆளில்லா விமானத் தாக்குதல்: அமெரிக்காவுக்கு கெடு விதித்து இம்ரான்கான் பதிலடி

பாகிஸ்தானின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல், ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க படைகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தலிபான் தீவிரவாதிகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் சிக்கி பாகிஸ்தான் தலிபான் தலைவர் ஹக்கிமுல்லா மசூத் பலியானார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் எதிர்கட்சி தலைவர்களில் ஒருவரான இம்ரான்கான், ‘அமெரிக்கத் தாக்குதலுக்கு கெடு விதித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘பாகிஸ்தான் மண்ணில் அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பலமுறை கண்டித்தும் அமெரிக்கா தனது அத்துமீறலை நீடித்து வருகிறது. இதற்கு இனிமேலும் அனுமதிக்க மாட்டோம்.
வருகிற 20-ந் தேதியுடன் அவர்களை தாக்குதலை நிறுத்தி கொள்ளவேண்டும். இதற்கு மேலும் தாக்குதல் நீடித்தால் பாகிஸ்தானிலிருந்து கைபர் கனவாய் வழியாக ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு உணவு மற்றும் பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்துவோம். அமெரிக்காவுக்கு எதிரான எங்களது பதிலடி கடுமையாக இருக்கும்' என எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications