தாய்லாந்துப் போராட்டம்: இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

பிரபல சுற்றுலாத் தளாங்களில் ஒன்றான தாய்லாந்தில் எப்போதும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலை மோதும். இந்நிலையில், கடந்த ஞாயிறன்று தாய்லாந்துப் பிரதமர் இங்க்லக் ஷினவத்ராவைப் பதவி விலகக் கோரி அங்கு போராட்டம் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக அப்போராட்டம் தலைநகர் பாங்காக்கிலிருந்து மற்ற இடங்களுக்கும் பரவி வருகிறது. தாய்லாந்து அரசின் அரசின் எதிர்க்கட்சியாகச் செயல்படும் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தும் நோக்கத்தில் முக்கிய அரசாங்கக் கட்டிடங்கள் அனைத்தையும் முற்றுகையிட்டுள்ளனர்.
தொடரும் இது போன்ற போராட்டங்களால் அங்குப் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, இந்தியா உள்ளிட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரேசில் போன்ற 20க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் நாட்டிலிருந்து தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளவர்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்துள்ளன.
இது குறித்து வெளியிட்டுள்ள தகவலில், ‘தாய்லாந்தில் உள்ள இந்திய சுற்றுலாப்பயணிகளையும், இங்கு வாழ்ந்துவரும் இந்திய மக்களும் வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். மேலும், ஊடக அறிக்கைகள், சுற்றுலா நிர்வாகிகள் மற்றும் பயணிகள் தங்கியுள்ள விடுதி நிர்வாகத்தினர் ஆகியோர் மூலம் இந்தியர்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வரும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். இது இந்தியக் குடிமக்கள் அனைவருக்குமான அறிவிப்பு' என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும், விமான நிலையத்திற்கு செல்லுவோர் போக்குவரத்துத் தடைகளை சமாளிப்பதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே செல்லும்படியும் தூதரக இணையதளக் குறிப்பு அறிவித்துள்ளது. மேலும், நாட்டின் நிலவரங்கள் தூதரகத்தால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு இந்தியர்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications