பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தானுடன் பேசிய சீன வெளியுறவு அமைச்சர்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
பீஜிங்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகம்மது இஷாக் தாருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி தொலைபெசி வாயிலாக பேசியுள்ளர். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகாக இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு நெருக்கமாக அறியப்படும் சீனா, அந்த நாட்டு வெளியுறவு அமைச்சருடன் பேசியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் மினி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காம் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சுற்றுலாப் பயணிகளை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 26 பேர் பலியாகினர். நாட்டையே இந்த தாக்குதல் சம்பவம் உலுக்கியுள்ளது.

பஹல்காம் விவகாரத்தில் சீனா கருத்து
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம், வாகா - அட்டாரி எல்லை மூடல் என பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
சிந்து நதி நீரை நிறுத்தினால் அதை போராகவே கருதுவோம் எனவும் பாகிஸ்தான் அடாவடியாக பேசி வருகிறது. அதுபோக பாகிஸ்தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராக வம்பு இழுக்கும் வகையில் ஆணவத்துடன் பேசி வருகிறார்கள். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இந்த விவகாரத்தில் சீனா இதுவரை வெளிப்படையாக கருத்து தெரிவிக்காமல் இருந்தது.
பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்
இந்த நிலையில்தான், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி பேசியுள்ளார். தொலைபேசி வாயிலாக இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில், பாரபட்சமற்ற விசாரணைக்கு சீனா ஆதரவு அளிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் இருதரப்புமே பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.
மேலும், பதட்டங்களை தணிக்க இரு தரப்பும் பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது அனைத்து நாடுகளின் பொறுப்பாகும். பாகிஸ்தானின் உறுதியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது" என்றார். இந்த உரையாடலின் போது, பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துள்ள பதற்றங்கள் தொடர்பாகவும் சீனாவிடம் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் எடுத்துரைத்துள்ளார்.
என் ஐ ஏ விசாரணை தொடக்கம்
இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 537 பாகிஸ்தானியர்கள் அட்டாரி எல்லை வழியாக வெளியேறி இருக்கிறார்கள்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை தனது விசாரணையை தொடங்கியுள்ளது. தாக்குதல் நடந்த பகுதி தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக சீல் வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications