இந்தியா - சீனா இடையே ரூ.1.39 லட்சம் கோடிக்கு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து
பெய்ஜிங்: சீனாவில் இந்தியப் பிரதமர் மோடி முன்னிலையில், ரூ. 1.39 லட்சம் கோடிக்கு இந்திய - சீன நிறுவனங்கள் இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மூன்று நாள் பயணமாக சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டின் 22 முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் சீனாவின் அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா உள்பட சீனா லைட் அண்ட் பவர், ஜியோமி, ஹுவாய், டிரினா சோலார் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சந்திப்பிற்குப் பின், இரு நாட்டு தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், மோடி முன்னிலையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். மரபுசாரா எரிசக்தி, மின்சாரம், உருக்குத் துறை, சிறு, நடுத்தர தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதனைத் தொடர்ந்து அவர்கள் மத்தியில் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் வெளிப்படைத் தன்மையுள்ள, நிலையான ஆட்சியை நடத்தி வருகிறோம். நாட்டின் எதிர்காலத்தையும், நீண்ட கால வளர்ச்சியையும் மனதில் கொண்டு திட்டங்களை வகுத்து வருகிறோம்.

இந்தியாவில் வர்த்தகச் சூழல் மாறிவிட்டதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எளிதில் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, "இந்தியாவில் தயாரிப்போம்' திட்ட அமலாக்கம், அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியை அதிகரிப்பது என முதலீட்டுக்குச் சாதகமான சூழலை உருவாக்கி வருகிறோம்.
சீன நிறுவனங்களுக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகும். இந்தியாவில் முதலீடு செய்வதற்கு நீங்கள் ஒரு முறை முடிவு செய்துவிட்டால், உங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கிக் கொடுப்போம். ஆசியக் கண்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கும், அரசியல் நிலைத்தன்மைக்கும், இந்தியா- சீனா இடையே நல்லுறவு நீடிக்க வேண்டியது அவசியம்' என்றார்.
இந்தியா - சீன நிறுவனங்களிடையே கையெழுத்திடப் பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களின் விவரமாவது:
- சீன வளர்ச்சி வங்கி, தொழில், வர்த்தக வங்கி ஆகியவை இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனத்துக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,860 கோடி) கடனுதவி வழங்குவது.
- சீனாவின் கோல்டன் கன்கார்டு ஹோல்டிங்ஸ்- இந்தியாவின் அதானி குழுமம் இணைந்து குஜராத் மாநிலம், முந்த்ரா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஒருங்கிணைந்த சூரிய மின்சக்தி பூங்காவை உருவாக்குவது.
- குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகம் - சீனாவின் குவாங்சுவா துறைமுகம் இடையே சகோதரத்துவ உறவை உருவாக்கும் வகையில் அதானி குழுமம்- குவாங்குசுவா துறைமுக நிர்வாகம் இடையே ஒப்பந்தம்.
- இந்தியாவின் வெல்ஸ்பன் எனர்ஜி நிறுவனமும், சீனாவின் டிரினா சோலார் நிறுவனமும் இணைந்து, இந்தியாவில் 500 மெகா வாட் சூரியவிசை மின் உற்பத்தி, 500 மெகாவாட் சூரிய மின்கலம் அமைப்பது.
- திரைப்படம், பொழுதுபோக்குத் துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு அளிப்பது.
- இந்தியாவின் ஐ.எல்.எஃப்.எஸ் - சீனாவின் தொழில், வர்த்தக வங்கி இடையே வர்த்தக ஒப்பந்தம்.
- 4,000 மெகாவாட் திறனில் செயல்படவுள்ள லைஜா அனல் மின் திட்டத்துக்காக, ஐ.எல்.எஸ்.எஸ் - சீனாவின் ஹுவானங் குழுமம் இடையே ஒப்பந்தம்.
- ஜிண்டால் பவர் அண்ட் ஸ்டீல் - சீனாவின் தொழில், வர்த்தக வங்கி இடையே ஒப்பந்தம்.
- இந்தியாவின் இன்ஃபோசிஸ்- சீனாவின் கின்னான் மாகாண அரசும் இணைந்து, கின்னானில் "சீனா - இந்தியா தகவல் சேவை மையம்' அமைப்பது.
- பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனமும், சீனாவின் தேசிய தொழில்நுட்ப ஏற்றுமதி, இறக்குமதிக் கழகமும் இணைந்து, குஜராத்தில் ஒருங்கிணைந்த உருக்காலைத் திட்டத்தை தொடங்குவது உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சீனாவில் ஐசிஐசிஐ வங்கிக் கிளை:
இதேபோல், இந்திய, சீன தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், ஷாங்காய் நகரில் ஐசிஐசிஐ வங்கியின் கிளையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தியாவின் தனியார் தொழில் கடன் வழங்கும் நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி, முதல் முறையாக சீனாவில் தனது கிளையைத் தொடங்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications