வழிக்கு வந்த சீனா.. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!
ரியோ டி ஜெனிரோ: சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்த கண்டனம் தெரிவிக்கப்படாததால், இந்தியா இதன் கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டது. இதனையடுத்த பிரிக்ஸ் மாநாட்டில் இந்த தாக்குதலுக்கு கண்டம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பிரிக்ஸ் பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
இந்தியா, ரஷியா, சீனா, ஈரான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் அடங்கிய அமைப்புதான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இந்த அமைப்பின் மாநாடு சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றிருந்தார்.

ஆனால், இந்த மாநாட்டில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், பஹல்காம் தாக்குதல் குறித்தும் எந்த கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை. இதனையடுத்து இதன் கூட்டறிக்கையில் இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் கையெழுத்திட மறுத்துவிட்டார். இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்திருந்தது.
இந்நிலையில், தற்போது நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பஹல்காம் தாக்குதல் குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து பிரிக்ஸ் கூட்டறிக்கையில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. பிரிக்ஸ் பிரகடனத்தில், "ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், இதில் 26 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இது பிரிக்ஸ் நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அதற்கு பதிலாக, "பயங்கரவாதிகளின் எல்லை தாண்டிய செயல்பாடுகள், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி மற்றும் அவர்களுக்கு புகலிடம் கொடுப்பது உட்பட, அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்" என்று பிரிக்ஸ் தலைவர்கள் தங்கள் அறிக்கையில் தெரிவித்திருக்கின்றனர்.
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, "பயங்கரவாதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாளர்களையும் சமமாக நடத்த முடியாது.
தனிப்பட்ட அல்லது அரசியல் ஆதாயத்திற்காக, பயங்கரவாதத்திற்கு சைலன்ட்டாக ஆதரவளிப்பது, பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாதத்தை ஆதரிப்பது எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்று பிரதமர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications