இந்திய நாடாளுமன்ற தேர்தல்தான் எங்கள் அடுத்த குறி.. மார்க் ஜூக்கர்பெர்க் பகிரங்க அறிவிப்பு
இந்தியாவில் நடக்க இருக்கும் தேர்தல்தான் பேஸ்புக்கின் அடுத்த குறி என்று அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வெளிப்படையாக பேட்டி அளித்து இருக்கிறார்.
நியூயார்க்: இந்தியாவில் நடக்க இருக்கும் தேர்தல்தான் பேஸ்புக்கின் அடுத்த குறி என்று அதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வெளிப்படையாக பேட்டி அளித்து இருக்கிறார். இதற்காக பல நபர்களை பணிக்கு அமர்த்தி இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
தேர்தல் முக்கியம்
உலகம் முழுக்க நடக்க இருக்கும் தேர்தல் குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் பேட்டி அளித்து இருக்கிறார். அதன்படி 2018l தொடங்கி 2019 இறுதி வரை தேர்தலுக்கு மிக முக்கியமான காலம் என்று கூறியுள்ளார். இந்தியா, அமெரிக்கா (இடைக்கால தேர்தல்), பாகிஸ்தான், பிரேசில், மெக்சிகோ, ஹங்கேரி ஆகிய நாடுகளில் தேர்தல்கள் நடக்க இருக்கிறது. இதில் பேஸ்புக் கவனம் செலுத்தும் என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார்.
முடக்குவார்கள்
இதற்காக உலகம் முழுக்க இருக்கும் தேர்தல் பரப்புரை அமைப்புகளை பேஸ்புக்கில் முடக்க இருக்கிறார்கள். இவர்கள் தேர்தல் சமயத்தில் மக்களின் மனதை பேஸ்புக் போஸ்டுகள் மூலம் மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. தேர்தலில் பேஸ்புக் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பின் இந்த முடிவை மார்க் ஜூக்கர்பெர்க் எடுத்துள்ளார்.
15,000 நபர்கள் வேலை
இதற்காக தற்போது 15,000 பேர் வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். இன்னும் 5,000 பேர் இந்த மாத இறுதியில் பணிக்கு அமர்த்தப்பட்ட உள்ளனர். இதற்காக புதிய ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளார். அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.
என்ன வேலைகள் நடக்கும்
இவர்கள் உலகம் முழுக்க இருக்கும் பொய்யான கணக்குகளை முடக்குவார்கள். அதற்கு அடுத்து தேர்தல் குறித்து தவறான தகவல் கொடுக்கும் ஐடிக்களை முடக்குவார்கள். அதன்பின் தேர்தலுக்கு குந்தகம் விளைவித்து, தேசிய அமைதியை குழைக்கும் நபர்களின் ஐடிக்களை முடக்குவார்கள். இதனால் தேர்தலில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும் என்றுள்ளார்.