மாலத்தீவுடன் முக்கிய ஒப்பந்தம் போடும் இந்தியா! உற்று பார்க்கும் சீனா.. உலக அரசியல் மொத்தமாக மாறுதே
மாலே: மாலத்தீவுடன் ஈஸியாக வர்த்தகம் செய்ய FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது..
கடந்த சில காலமாக இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு மோசமாக இருக்கும் நிலையில், இப்போது நிலைமை மெல்ல மாற தொடங்கி இருப்பது போலத் தெரிகிறது.

அதாவது மாலத்தீவுடன் எளிமையாக வர்த்தகம் செய்ய ஏதுவாக FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக மாலத்தீவு அமைச்சர் முகமது சயீத் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம்: இது தொடர்பாக மாலேயில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வர்த்தக அமைச்சர் சயீத், இரு நாடுகளுக்கும் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஏற்கனவே SAFTA எனப்படும் தெற்காசியச் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இருக்கிறது. இந்த SAFTA தவிர, மாலத்தீவுகளுடன் தனியாக ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இப்போது தொடங்கி நடந்து வருகிறது.
எந்தவொரு நாடு விரும்பினாலும் மாலத்தீவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திடலாம்.. இதற்கான வாய்ப்பு அனைத்து நாடுகளுக்கும் வழங்கப்படும் என்பதில் எங்கள் (மாலத்தீவு) அதிபர் முகமது முய்சு உறுதியாக இருக்கிறார். இரு தரப்பு வர்த்தகத்தை எளிதாக எத்தனை நாடுகளில் முடியுமோ அத்தனை நாடுகளில் வர்த்தக ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்" என்றார்.
பிரச்சனை: இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகவே நல்லுறவு இருந்து வந்தது. இருப்பினும், எப்போது முய்சு மாலத்தீவு அதிபராகப் பொறுப்பேற்றாரோ அப்போதே இரு தரப்பு உறவு பாதிக்கத் தொடங்கியது. மாலத்தீவுக்கு உதவும் வகையில் இந்தியா ஹெலிகாப்டர்களை வழங்கிய நிலையில், அதை ஆப்ரேட் செய்ய இந்திய ராணுவத்தினர் மாலத்தீவில் இருந்தனர். அவர்கள் வெளியேறியே தீர வேண்டும் என்பதில் முய்சு உறுதியாக இருந்தார். இதையடுத்து ராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு இம்மாத தொடக்கத்தில் அவர்களுக்குப் பதிலாக ராணுவம் சாராத தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
பிரதமர் மோடி: குறிப்பாகப் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை சில மாலத்தீவு அமைச்சர்கள் கேலி செய்தது இரு நாட்டு உறவில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவுக்குச் சுற்றுலா செல்வதைப் பல இந்தியர்கள் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இதனால் மாலத்தீவு பொருளாதாரமே பாதிக்கப்பட்டது. இதன் பின்னரே மாலத்தீவு தனது டோனை மாற்றியது. சமீபத்தில் கூட அந்நாட்டின் அமைச்சர், இந்தியர்கள் மாலத்தீவுக்குச் சுற்றுலா வர வேண்டும் என வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இரு நாட்டு உறவு இப்படி இருக்கும் இந்த நேரத்தில் தான் மாலத்தீவுடன் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாலத்தீவு அதிபர் முய்சு சீனா உடன் நெருக்கம் காட்ட முயலும் நிலையில், இந்தியா மாலத்தீவுடன் வர்த்தக ஒப்பந்தம் போட முயல்வது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
பழைய ஒப்பந்தம்: இந்தியா மாலத்தீவு இடையே ஏற்கனவே கடந்த 1981இல் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இரு நாடுகளுக்கு இடையே அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்வதை அந்த ஒப்பந்தம் எளிதாக்குகிறது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு இந்தியா- மாலத்தீவு இடையேயான இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது.
கடந்த 2021இல் அது முதல் முறையாக $300 மில்லியனை தாண்டியது.. இதற்கிடையே அடுத்த ஆண்டில் இந்த வர்த்தகம் $500 மில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications