ஆஸி.யில் பயங்கரம்: மர்ம நபர்களின் ஆசிட் தாக்குதலில் இந்திய வம்சாவளிப் பெண் பலி
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஆசிட் வீசப் பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தியப் பெண் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் மோனிகா செட்டி(39). மணமாகி மூன்று குழந்தைகளுக்குத் தாயான இவர், சமீப காலமாக குடும்பத்தைப் பிரிந்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரின் மேற்குப் பகுதியில் சுற்றித் திரிந்து வந்ததாகச் சொல்லப் படுகிறது.
இந்நிலையில் கடந்த 3ம் தேதியன்று, மர்மநபர்களால் ஆசிட் தாக்குதலுக்கு ஆளானார் மோனிகா. பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் படுகாயங்களுடன் உதவி வேண்டி அழுது கொண்டிருப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் போன் செய்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தப் போலீசார், மோனிகாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடலின் 80% தீக்காயங்களால் பாதிக்கப் பட்டிருப்பதாக மோனிகாவைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்திருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மோனிகா நேற்று முன்தினம் பலியானார்.
மோனிகா மீது திராவகம் வீசிய நபர் யார்? எதற்காக இந்த சம்பவம் நடந்தது? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் விசாரணையில் இவர் பிஜி நாட்டில் பிறந்த இந்திய வம்சாவளி என்றும், இவருக்கு பிறந்த 3 குழந்தைகளும் தற்போது அவரது முன்னாள் கணவருடன் வசித்து வருகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications