இங்கிலாந்தில் 2 இந்தியர்கள் மீது தாக்குதல்: ஒருவருக்கு கண்ணில் அடி, மற்றொருவர் முட்டி பெயர்ந்தது
லண்டன்: இங்கிலாந்தில் பிரபல இந்திய உணவகத்திற்கு வெளியே இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 2 வாலிபர்களை 7 பேர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர் ப்ரீத் பனேசர்(23). கணக்காளர். அவர் தனது குடும்பத்தார் மற்றும் நண்பர் ஜக்தீப் சராவுடன் பிர்மிங்ஹாமில் உள்ள பிரபல இந்திய உணவகத்திற்கு இரவு வேளையில் சாப்பிட சென்றார். சாப்பிட்டு முடித்துவிட்டு அவர்கள் வெளியே வந்தபோது 2 கார்களில் வந்த 7 பேர் கிரிக்கெட் மட்டைகள், இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை வைத்து ப்ரீத் மற்றும் அவரது நண்பர் ஜக்தீப் சராவை சரமாரியாக தாக்கினர்.
ப்ரீத்தன் அண்ணன் ஹர்தீப்(29), அவரது மனைவி ஷெல்லி, ஜக்தீப்பின் சகோதரி ஜஸ்ப்ரீத் ஆகியோர் தப்பியோடிவிட்டனர். இந்த தாக்குதலில் ப்ரீத்தின் கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரது நண்பரின் முட்டுக்காலை அவர்கள் அடித்து நொறுக்கிவிட்டனர். காயம் அடைந்த இருவரும் அருகில் உள்ள ராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து ஹர்தீப் கூறுகையில்,
அந்த 7 பேரும் ஆசியர்கள். அவர்களுக்கு 18 முதல் 25 வயது வரை இருக்கும். அவர்கள் யார் என்றே எங்களுக்கு தெரியாது. நாங்கள் யாரிடமும் வம்புக்கு செல்லாதவர்கள். அவர்கள் திடீர் என்று கார்களில் இருந்து இறங்கி வந்து தாக்கினர். அவர்கள் என் தம்பியை தாக்கியதும் நான் உதவிகோரி கத்தினேன் என்றார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.