சவுதியில் தத்தளித்த மேலும் 6 தமிழர்களை மீட்டு ஊருக்கு அனுப்பிய இந்தியன் சோஷியல் ஃபோரம்
ரியாத்: சவுதியில் சிக்கித் தவித்த மேலும் 6 தமிழர்களை இந்தியன் சோஷியல் ஃபோரம் மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த அண்ணாமலை முருகேசன், செந்தில் கண்ணன், ஆறுமுகம் முருகேசன், சின்ன கருப்பசாமி, சுரேந்திரன் முத்துக்குமார், செந்தில் கண்ணப்பன், பெருமாள், ஜெயபாரதி ஆகியோர் சவுதி அரேபியா ரியாதில் உள்ள ஷிபா என்னுமிடத்தில் உள்ள ஒரு கம்பெனிக்கு வேலைக்கு வந்துள்ளார்கள்.
அந்த கம்பெனியில் சில மாதங்கள் மட்டுமே வேலை செய்துள்ளார்கள். பின்பு கம்பெனியில் வேலையில்லை எனக் கூறி அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் விட்டுவிட்டார்கள்.

இந்த நிலையில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் பல்வேறு உதவிகளை முகநூல் வழியாக அறிந்து அதன் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கேட்டார்கள்.
அவர்களை இந்தியன் சோஷியல் ஃபோரம், ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டியின் துணைத் தலைவர் முஹம்மதலி பாபு, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அனீஸ் முஹம்மது மற்றும் துணை தலைவர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுத்து தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் தங்க வைத்து அவர்கள் நாடு திரும்பும் அனைத்து முற்சிகளையும் செய்து வந்தனர்.
இறைவன் உதவியால் இந்தியன் சோஷியல் ஃபோரம், ரியாத் -தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் துணைத்தலைவர் முகம்மதலி பாபு, செயலாளர் சர்தார் என்கிற சாகுல் ஹமீது ஆகியோரின் துரிதமான நடவடிக்கைகளால் சவுதி அரசின் சட்டங்களுக்கேற்ப விரைந்து செயல்பட்டு அவர்கள் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்கள்.
முன்னதாக சவுதியில் முறைப்படியான விசா இல்லாமல் 18 மாதங்களாக தனது இகாமாவை புதுப்பிக்க முயற்சி செய்தும் முடியாமல் தவித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆரோக்ய சாமி பீட்டரை இந்தியன் சோஷியல் ஃபோரம் ஊருக்கு அனுப்பி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் மனித நேய பணிகள் தொய்வில்லாமல் தொடர்வதற்கு பெரிதும் உதவி வரும் ஊடகங்களுக்கும் இணையதள ஆசிரியர்களுக்கும் இந்தியன் சோஷியல் ஃபோரம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.












Click it and Unblock the Notifications